அஜீத்துடன் நடித்தது கனவு போல் இருந்தது: பார்வதி நாயர்

அஜீத்துடன் நடித்தது கனவு போல் இருந்தது: பார்வதி நாயர்

thala4

ஜனவரி 18, அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்துள்ளார். இதில் அனுஷ்கா, திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் பார்வதி நாயரும் நடித்துள்ளார்.

மாடலிங், ஓவியம் என ஆர்வம் உடைய இவர், நடிப்பு துறையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார். தமிழில் தனது முதல் படமான ‘என்னை அறிந்தால்‘ படத்தில் அஜீத்துடன் இணைந்து நடித்துள்ளார்.

அபுதாபியில் மலையாள குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை பொறியாளர், தாய் கல்லூரி ஆசிரியர். படிப்பில் இருந்த ஆர்வத்தினால் என்ஜினீயரிங் பயின்றார். ஒரு மாடலுக்கான அனைத்து அம்சங்களையும் பெற்றிருந்த இவர், பல விளம்பர படங்களில் நடித்து வந்துள்ளார்.

பின்னர் கன்னடம் மலையாளம் படங்களில் நடித்தார். பல படங்களில் நடித்து வந்தாலும் ஓவியம் தீட்டுவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். பள்ளிபருவத்தில் உலகின் மிக நீளமான ஓவியம் தீட்டும் குழுவில் இடம் பெற்று கின்னஸ் சாதனைக்கான சான்றிதழையும் பெற்றுள்ளார்.

என்னை அறிந்தால் வாய்ப்பை பற்றி கூறும்போது, “காலம் என்னை கனிவாய் வழி நடத்தி வந்துள்ளது. எனது முதல் தமிழ் படமே அஜீத் மற்றும் கௌதம் உடன் அமைத்திருக்கிறது. கௌதம் இப்படத்திற்கு அழைக்கும் முன் வரை தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது ஒரு நீண்ட நாள் ஆசையாகவே இருந்து வந்தது.

அஜீத் அனைவரிடமும் மிக அன்பாக நடந்து கொள்வார். அஜீத் நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவருடன் நடித்தது ஒரு கனவாய் இருந்தது. நான் பணிபுரிந்த இயக்குனர்களில் பழகுவதற்கு மிக இலகுவானவர் கௌதம்.

இவர் இருக்கும் பொழுது படப்பிடிப்பு தளமே மிக பரபரப்பாக இருக்கும். என்னை அறிந்தால் குழுவினருக்கும், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அவர்களுக்கும் நன்றி கூறியே ஆக வேண்டும்.

எவ்வளவு பெரிய நிலைகளுக்கு சென்றாலும், உச்சத்தில் நின்றாலும் அடக்கத்துடன் இருக்க வேண்டும். இப்படி என்னை அறிந்தால் படத்தின் மூலம் பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன்” என்கிறார் பார்வதி நாயர்.