இலங்கை நிலச்சரிவில் 200 இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளர்கள் புதைந்து பலி

இலங்கை நிலச்சரிவில் 200 இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளர்கள் புதைந்து பலி

landslide2

அக்டோபர் 31, இலங்கையின் பாதுல்லா மாவட்டம் மீரியாபெட்டா தேயிலை தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்த இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட 200 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பாதுல்லா மாவட்டம் மீரியாபெட்டா தேயிலைத் தோட்டப் பகுதியில் நேற்று முன்தினம் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த 120 வீடுகள் முழுவதுமாக நிலச்சரிவில் புதைந்தன. அங்கு இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட 200க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். இதில் 192க்கும் மேற்பட்டோர் காணவில்லை. அவர்கள் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று இலங்கை பேரிடர் நிர்வாக அமைச்சர் மகிந்த அமரவீரா தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்ட 817 பேர் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீரியாபெட்டாவில் நடந்த நிலச்சரிவில் சிக்கிய 200 பேரை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் இல்லை. மீட்புப் பணியில் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பைச் சேர்ந்த 5 குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

மேலும் ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த 500 பேர் மற்றும் இலங்கை விமானப்படை, போலீஸ் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளில் உள்ளனர். தொடர்ந்து மழை பெய்துவருவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள நிர்வாக அலுவலகமும் நிலச்சரிவில் புதைந்துள்ளது. அதனால் சரியான விவரங்கள் கிடைக்கவில்லை. கடந்த 2011ம் ஆண்டு இந்த பகுதிக்கு நிலச்சரிவு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. ஆனால் அதை தேயிலை தோட்ட நிர்வாகம் சாதாரணமாக எடுத்துக் கொண்டதால்தான் இந்த அளவுக்கு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.