செகாமாட், 25 ஆகஸ்ட் 2026 : செகாமாட் நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனைத் திட்டம் எட்டாவது முறையாக நடைபெற்றது. இம்முறை 1,000 எண்ணிக்கையிலான 14 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
ஜெமெந்தா, ஜாலான் பாடாங் பகுதியில் உள்ள பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இத்திட்டத்தில் ஒவ்வொரு எரிவாயு சிலிண்டரும் RM10 என்ற விலையில் வழங்கப்பட்டது. ஒவ்வொரு சிலிண்டருக்கும் RM16-க்கும் அதிகமான மீதமுள்ள செலவை யுனேஸ்வரன் ராமராஜ் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
குடும்பங்களின் சமையலறைச் செலவைக் குறைப்பதற்கு சிறிய அளவிலாவது உதவும் நோக்கில் இந்தத் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
ஜெமெந்தா மட்டுமின்றி, செகாமாட் நகரம், பத்து அனாம், புலோ பாசாப், தாமான் யாயாசான் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்தும் மக்கள் இத்திட்டத்தில் கலந்துகொண்டனர். சிலர் முதல் முறையாக இந்தச் சலுகையைப் பெற்ற நிலையில், சிலர் ஏற்கனவே நான்காவது முறையாக இத்திட்டத்தின் மூலம் பயனடைந்ததாக தெரிவித்தனர்.
காலி எரிவாயு சிலிண்டர்களை வழங்கி புதிய சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் Drive-Thru முறையில் சிலிண்டர் மாற்றம் நடைபெற்றது. இதனால் பொதுமக்களுக்கு விரைவாகவும் வசதியாகவும் சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
செகாமாட்டைச் சேர்ந்த H-J Enterprise நிறுவனம் எரிவாயு சிலிண்டர்களுக்கான இருப்பை வழங்கியதுடன், பயனாளிகளுக்கு இலவசமாக சிறப்பு ஏப்ரன்களையும் வழங்கியது. திட்டத்தின் முதல் பதிப்பிலிருந்து நிறுவனம் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக யுனேஸ்வரன் குறிப்பிட்டார்.
மேலும், செகாமாட் மாவட்ட APM உறுப்பினர்கள், RELA அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை வழங்கிய தரப்பினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். எட்டாவது பதிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்காலத்திலும் செகாமாட் தொகுதி மக்களுக்கான இத்தகைய திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.







