09 ஆகஸ்ட் 2026 : நாட்டின் கல்வி அமைப்பில் தமிழ்ப்பள்ளிகள் முக்கியப் பங்காற்றி வருவதாகவும், அவை கல்வியை வழங்கும் இடமாக மட்டுமின்றி, மாணவர்களின் கலாசாரம் மற்றும் அடையாளத்தை வளர்க்கும் வலுவான தளமாகவும் விளங்குவதாக டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
SJK(T) Ladang Effingham பள்ளியின் 43-வது வருடாந்திர விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை பார்வையிட்ட அவர், ஒவ்வொரு குழந்தையும் தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டு, நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் பங்களிக்கக்கூடிய வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்ய பள்ளிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றார்.
2023 முதல் 2026ஆம் ஆண்டு வரை தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்பு, மேம்பாடு மற்றும் புதிய வசதிகளை நிர்மாணிப்பதற்காக மொத்தம் RM237.48 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். நாடு தொடர்ந்து பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையிலும் இந்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருப்பது, மலேசிய இந்திய சமூகத்தின் நலனிலும், மாணவர்கள் தங்களது பள்ளிப் பருவத்தில் சிறந்த கல்விச் சூழலைப் பெறுவதிலும் அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழ்ப்பள்ளிகளை வலுப்படுத்துவதன் மூலம் மாணவர்களின் கல்வி, கலாசாரம், அடையாளம் மற்றும் தனித்திறன்கள் மேலும் வளர்ச்சியடையும் என அவர் தெரிவித்தார். சமூகத்திற்கு தொடர்ந்து தன்னால் முடிந்த சிறந்த சேவையை வழங்குவதுடன், தமிழ்ப்பள்ளிகள் மற்றும் இந்திய சமூகத்திற்கு தேவையான ஆதரவை தொடர்ந்து வழங்குவேன் என்றும் கோபிந்த் சிங் டியோ உறுதியளித்தார்.






