ஜோகூர், 05 ஜூலை 2026 : மத்திய அரசும் மாநில அரசுகளும் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட்டால்தான் மக்களின் நலனுக்கான வளர்ச்சித் திட்டங்களை விரைவாகவும் திறம்படவும் செயல்படுத்த முடியும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். ஜோகூர் பாருவில் நடைபெற்ற சீன சமூகத்தினருடனான சந்திப்பில் உரையாற்றிய அவர், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களின் நலனே அரசின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பொருளாதார முன்னேற்றத்தை வலுப்படுத்தவும், மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்படுவது காலத்தின் தேவையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். தாம் ஜோகூருக்கு அரசியல் நோக்கத்துடன் வரவில்லை என்றும், மாநில மக்களின் நலன் மற்றும் எதிர்கால வளர்ச்சியே தமது வருகையின் முக்கிய நோக்கம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
நாட்டின் அனைத்து மாநிலங்களும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்தார். மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், நாட்டின் வளர்ச்சியும் மக்களின் வாழ்க்கைத் தரமும் மேலும் உயர்வடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.







