விபத்துக்குள்ளான ஏர்ஏசியா விமான கறுப்புப்பெட்டியில் இருந்து சிக்னல் உணரப்பட்டது

விபத்துக்குள்ளான ஏர்ஏசியா விமான கறுப்புப்பெட்டியில் இருந்து சிக்னல் உணரப்பட்டது

airasia

ஜனவரி 9, கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து அதிர்வலைகள் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் 28–ம் தேதி 162 பயணிகளுடன் இந்தோனேஷியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் ஜாவா கடல் பகுதியில் விழுந்தது. இதையடுத்து பல நாடுகளுடன் கைகோர்த்து இந்தோனேசிய அரசு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தது. இந்த தேடுதல் வேட்டையில் விமானத்தின் வால் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து விமானத்தின் வால் பகுதியில் தான் கருப்புப் பெட்டியும் இருக்கும் என்பதால் அதில் கருப்பு பெட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு அதில் கருப்பு பெட்டி காணப்பட வில்லை. எனினும் வால்பகுதி கிடைத்த இடத்தில் தான் கறுப்பு பெட்டியும் இருக்கக்கூடும் என யூகிக்கப்பட்டது. எனவே, ரிமோட் மூலம் இயக்கப்பட்டு, கடலுக்குள் சென்று புகைப்படம் கருவியை வைத்து இந்தோனேஷிய மீட்பு குழுவினர் மற்றும் நீர்மூழ்கி வீரர்கள் கருப்பு பெட்டியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் தற்போது விமானத்தின் வால் பகுதி கிடைத்த இடத்திற்கு அருகே கருப்பு பெட்டியிலிருந்து வரும் அதிர்வலைகள் உணரப்பட்டுள்ளதாக தேடுதல் அதிகாரி தெரிவித்தார். விமானத்தின் அனைத்து நிகழ்வுகளும் பதிவாகி இருக்கும் முக்கிய பாகமான கருப்பு பெட்டி கிடைத்தால் தான் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது தெரிய வரும் மேலும் கருப்பு பெட்டியின் ஆயுள் காலம் 30 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.