குலாய், 05 ஏப்ரல் 2026 : உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை சமாளிக்கும் நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும், மக்களின் நலனை பாதுகாப்பது முக்கிய முன்னுரிமையாக இருக்கும் என்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் டத்துக் ஃபஹ்மி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய ஃபேஸ்புக் அறிக்கையின் மூலம் அவர் கூறுகையில், எந்தவித சவால்களையும் எதிர்கொள்ளும் நிலையில் நாட்டை வலிமையானதாகவும், நிலைத்தன்மையுடனும், தாங்கும் திறனுடனும் வைத்திருப்பதே அரசின் முக்கிய நோக்கமாகும் என்றார்.
“உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் போது, எங்களின் பலம் ஒழுக்கத்திலிருந்து உருவாகிறது. அது ஒத்துழைப்பால் வலுப்பெற்று, நம்பிக்கையால் ஆதரிக்கப்படுகிறது,” என அவர் தெரிவித்தார். நேற்று இரவு, குலாய் நாடாளுமன்ற உறுப்பினரும் தனது துணை அமைச்சருமான தியோ நீ சிங் உடன் நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டார்.
இதற்கிடையில், மக்கள் செலவுகளை கட்டுப்படுத்த உதவும் வகையில் ‘பிரைஸ் கேச்சர்’ (PriceCatcher) செயலியை பயன்படுத்துமாறும் அவர் ஊக்குவித்தார். இந்த செயலி மூலம் பொருட்களின் விலைகளை சரிபார்த்து, ஒப்பிடும் வசதி கிடைப்பதால், நுகர்வோர் புத்திசாலித்தனமான செலவின முடிவுகளை எடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.





