பள்ளிகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விவரங்களைக் கல்வி அமைச்சு சேகரித்து வருகிறது

பள்ளிகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விவரங்களைக் கல்வி அமைச்சு சேகரித்து வருகிறது

புத்ராஜெயா, 24/03/2025 : பல மாநிலங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் ஏற்பட்டிருக்கும் சேதங்கள் குறித்த முழு அறிக்கையை கல்வி அமைச்சு சேகரித்து வருகின்றது.

மாணவர்களுக்கு ஏற்ற சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கும் வகையில் அதற்கான பராமரிப்பு பணிகளை உடனடியான மேற்கொள்வதை உறுதி செய்ய சேகரிக்கும் தகவல்கள் ஆராயப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.

“அனைத்து தகவல்களையும் நாங்கள் சேகரித்து வருகிறோம். வழக்கம் போல எங்களின் நடவடிக்கை அறிக்கை கிடைத்தப் பிறகு தான் தொடங்கும். அதிகம் பராமரிப்பு தேவைப்படும் பள்ளிகளுக்கு நாங்கள் உதவிகள் வழங்குவோம். அது ஒவ்வொரு பள்ளிகளிலும் ஏற்பட்டிருக்கும் சேதங்களைப் பொறுத்து அமைந்திருக்கும்”, என்று அவர் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் பராமரிப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதையும், அதற்கான உதவிகள் வழங்கப்படுவதையும் கல்வி அமைச்சு உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.

கடந்தாண்டு மற்றும் இவ்வாண்டின் தொடக்கத்தில், கெடா, திரெங்கானு, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் வெள்ளத்திற்குப் பின்னர் ஏற்பட்ட சேதங்களை நிவர்த்திச் செய்வதற்காக, 2 கோடியே 60 லட்சம் ரிங்கிட்டை வழங்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதை, ஃபட்லினா சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, மலாய் மொழி புரியாததால் இனவாத கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் ஆசிரியர் சம்பந்தப்பட்ட காணொளி ஒன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது குறித்தும் ஃபட்லினா சிடேக் கருத்துரைத்தார்.

அது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறிய அவர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய பள்ளிகளில் இனவாதப் பிரச்சனை குறித்த விவகாரங்களில் அமைச்சு ஒருபோதும் சமரசம் கொள்ளாது என்றும் வலியுறுத்தினார்.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews