நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: மன்மோகனிடம் விசாரணை

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: மன்மோகனிடம் விசாரணை

manmohan

புதுடில்லி: நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். அதேநேரத்தில், மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தப்படுமா என்பதற்கும் பதில் அளித்துள்ளனர்.
இருமுறை:

இதுதொடர்பாக, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்ததாவது: முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முறைகேடுகள் நடந்த காலகட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங் வசமே, நிலக்கரி துறை இருந்தது. அதனால், மன்மோகன் சிங் பதவிக்காலத்தில், அவரின் ஆலோசகராக இருந்த, டி.கே.ஏ.நாயரிடம், இந்த ஆண்டின் முற்பகுதியிலும், கடந்த மாதத்தில் இரு முறையும், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். அத்துடன், நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்தில் ஏற்பட்ட தாமதம், சுரங்க ஒதுக்கீடு தொடர்பான பைல்கள் மாயமானது உட்பட, பல விஷயங்கள் தொடர்பாக விவரங்கள் அறிய, வினாப்பட்டியல் ஒன்றும், அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பதில்கள் பெறப்பட்டன. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் விசாரணை நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

 

அவசியமானால்…:

இருந்தாலும், அத்தகைய விசாரணை உடனடியாக நடக்க வாய்ப்பு இல்லை. மிகவும் அவசியம் என்றால் மட்டுமே, அவரிடம் விசாரணை நடத்தப்படும். இந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக, 2006 முதல் 2009 வரை, பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிய, வினி மகாஜன் மற்றும் ஆஷித் குப்தாவிடமும் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.