மத்திய மந்திரிசபை மாற்றப்படுகிறது: மோடி ஆலோசனை

குஜராத்-மோடி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய மந்திரிசபை கடந்த மே மாதம் 26–ந்தேதி பதவி ஏற்றது. மோடியுடன் சேர்த்து மொத்தம் 45 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

பிரதமர் மோடி மிகச் சிறிய மத்திய மந்திரி சபையை அமைக்கவே முடிவு செய்திருந்தார். ஆனால் இலாகாக்களை ஒருங்கிணைப்பதில் சர்ச்சை ஏற்பட்டதால் மத்திய மந்திரி சபையை விரிவாக்கம் செய்ய தீர்மானித்தார்.

தற்போது மத்திய மந்திரி சபையில் அருண்ஜேட்லி உள்பட 3 மந்திரிகள் 2 இலாகாக்களை வகித்து வருகிறார்கள். அந்த இலாகாக்களுக்கு புதிய மந்திரிகள் நியமனம் செய்யப்பட வேண்டியதிருப்பதுடன், அனைத்து அமைச்சகங்களுக்கும் ராஜாங்க மந்திரிகள் நியமனம் செய்ய வேண்டியதுள்ளது.

இதற்கிடையே புதிய அமைச்சரவை அமைக்கப்பட்ட முதல் 2 மாதங்களில் ஒவ்வொரு மந்திரியும் எப்படி செயல்பட்டு வருகிறார் என்பது பற்றி பிரதமர் மோடி ரகசிய ஆய்வு நடத்தி வருகிறார். திறமையாக செயல்படும் மந்திரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்க அவர் திட்டமிட்டுள்ளார்.

அதே சமயத்தில் சிறப்பாக செயல்படாத மந்திரிகளுக்கு அவர் கல்தா கொடுப்பார் என்று கூறப்படுகிறது. எனவே மத்திய மந்திரி சபையில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்று டெல்லி வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

மேற்குவங்கம், உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் உள்பட சில மாநிலங்கள், மத்திய மந்திரிசபையில் உரிய பிரதிநிதித்துவம் பெறாமல் உள்ளன. அந்த மாநிலங்களுக்கு ஏற்ப மந்திரி சபையில் பிரதிநிதித்துவம் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் புதிய மந்திரிகள் அனைவரும் இளைஞர்களாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். ஆனால் பாதுகாப்பு, ஊரக மேம்பாடு உள்ளிட்ட முக்கியத் துறைகளை அனுபவம் இல்லாதவர்களுக்கு கொடுக்க முடியாது.

எனவே அனுபவம் உள்ள மூத்த தலைவர்களை முக்கியத் துறைகளிலும், மற்றவர்களை ராஜாங்க மந்திரிகளாக்கி உதவிக்கு வைத்துக் கொள்ள திட்ட மிடப்பட்டுள்ளது. இது பற்றி நரேந்திர மோடி பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் ஆலோசனையை தொடங்கி உள்ளார்.

தற்போது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. எனவே இப்போது மத்திய மந்திரி சபையை விரிவுபடுத்தவோ, மாற்றவோ முடியாது.

அடுத்த மாதம் (ஆகஸ்டு) பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிகிறது. அதன் பிறகு மத்திய மந்திரி சபையில் மிகப்பெரிய மாற்றங்களை பிரதமர் மோடி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி மூத்த மந்திரி ஒருவர் கூறுகையில், ‘‘தற்போதைய மந்திரிகளின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அதற்கு ஏற்ப மந்திரி சபை விரிவாக்கம் இருக்கும். அனேகமாக ஆகஸ்டு 14–ந்தேதிக்குப் பிறகு மந்திரி சபை மாற்றம் இருக்கும்’’ என்றார்.