ஏர் ஏசியா விமானத்தின் இதுவரை 40 உடல்கள் மீட்பு

ஏர் ஏசியா விமானத்தின் இதுவரை 40 உடல்கள் மீட்பு

airasia

டிசம்பர் 30, மாயமான ஏர் ஏசியா விமானத்தில் பயணித்தவர்களில் 40-க்கும் மேற்பட்டோரின் உடல்கள், ஜாவா கடல் பகுதியிலிருந்து மீட்கப்பட்டதாக இந்தோனேசிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தை தேடும் நடவடிக்கையின்போது, போர்னியோ தீவு அருகே விமானம் காணாமல் போன கடற்பகுதியில் விமானத்தின் பாகங்கள் மற்றும் உடல்கள் மிதப்பதை இந்தோனேசிய கடற்படை அதிகாரிகள் ஹெலிகாப்டலிருந்து கண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, மீட்பு படையினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், 40-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டதாக இந்தோனேசிய கடற்படை செய்தித் தொடர்பாளர் மனாஹன் சிமிரோங்கிர் தெரிவித்தார்.

இது குறித்து இந்தோனேசிய தேசிய பேரிட மீட்பு குழு இயக்குனர் எஸ்.பி. சுப்பிரியாதி கூறும்போது, “நீரால் உப்பிய சில உடல்கள் மீட்கப்பட்டு கடற்படைத் தளத்துக்கு முதற்கட்டமாக கொண்டுவரப்பட்டது. ஆனால் அவை அடையாளம் காணும் நிலையில் இல்லை. உடல்களில் உயிர் காக்கும் கவசங்கள் எதுவும் காணப்படவில்லை. மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர்களுடன் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

விமானத்தின் கதவு போன்ற சில பாகங்கள் மட்டுமே முதலில் தென்பட்டது. அதன் பின்னர் அங்கு ஆய்வு செய்தபோது உடல்கள் இருப்பது உறுதியானது” என்றார்.

இந்தத் தகவல்களை அடுத்து ஏர்ஏசியா தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஃபெர்னாண்டர்ஸ், உடனடியாக சுரபயாவுக்கு புறப்பட்டதாக தனது ட்விட்டர் தளத்தில் பதிவு செய்தார்.

இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலை புறப்பட்ட விமானம் தனது பயணத்தை தொடங்கிய 42 நிமிடங்களில் சரியாக காலை 7.42 மணிக்கு கட்டுப்பாட்டு தொடர்பிலிருந்து திடீரென மாயமானது.

இதில் சிங்கப்பூர், பிரிட்டன், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6 சிறுவர்கள், ஒரு கைக் குழந்தை உட்பட 155 பயணிகள் மற்றும் 7 பேர் கொண்ட விமானப் பணிக்குழுவினர் இருந்ததனர்.