சிங்கப்பூர், 08 ஆகஸ்ட் 2026 : மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையிலான சிங்கப்பூர் அதிகாரப்பூர்வ பணிப் பயணத்தின் ஒரு பகுதியாக, ‘Salam Dari Malaysia @ Singapore’ நிகழ்ச்சி நடைபெற்றது. சிங்கப்பூரில் வசித்து, பணியாற்றி வரும் மலேசியர்களை ஒன்றிணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில், மலேசியர்களின் அனுபவங்கள், கருத்துகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அமைச்சர் நேரடியாகக் கேட்டறிந்தார்.
வெளிநாடுகளில் வாழும் மலேசியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் பங்களிப்புகளைப் புரிந்துகொள்வதற்கு இத்தகைய நேரடி கலந்துரையாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஜொகூர், கோத்தா திங்கியைச் சேர்ந்த ADZEL Studio-வின் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட ஆறு இளம் நடனக் கலைஞர்கள் கலாசார நிகழ்ச்சியை வழங்கினர். ஆறு மாதங்கள் மட்டுமே பயிற்சி பெற்றிருந்த போதிலும், அவர்கள் மலேசியாவின் பல்வேறு கலாசார மரபுகளின் தனித்துவத்தை சிறப்பாக வெளிப்படுத்தினர். சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்களின் சாதனைகள், பங்களிப்புகள் மற்றும் நாட்டின் பெருமையை தொடர்ந்து நிலைநாட்டி வருவதற்காக KESUMA சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும், MyHeart Global Connect திட்டத்தின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் மலேசியர்களுடனான தொடர்புகளை தொடர்ந்து வலுப்படுத்தி, அவர்களுக்கிடையே வலையமைப்பு, நிபுணத்துவப் பகிர்வு மற்றும் நாட்டின் வளர்ச்சியில் பங்களிக்கும் வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
“மலேசியர்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும், அவர்கள் அனைவரும் மலேசியாவின் ஒரு அங்கமே” என்ற கருத்தை இந்நிகழ்ச்சி வலியுறுத்தியது.






