பெட்டாலிங் ஜெயா, 06 ஆகஸ்ட் 2026 : மறைந்த கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான நா. முத்துக்குமாரின் படைப்புகளை இசை வழியாக நினைவுகூரும் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய் – கருத்தும் கவியும்’ இன்னிசை நிகழ்ச்சிக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (ஆகஸ்ட் 5) பெட்டாலிங் ஜெயாவில் உள்ள இந்தியா கேட் உணவகத்தில் நடைபெற்றது.
பாடலாசிரியர் அருட்செல்வன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில், ஜோம் கிட்ஸ் பேண்ட் இசையமைப்பாளர் ஜே தலைமையில் நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் ஏற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
2000ஆம் ஆண்டு முதல் தனது மறைவு வரை ஏராளமான கவிதைகளையும் தமிழ்த் திரையிசைப் பாடல்களையும் படைத்து தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான முத்திரை பதித்த நா. முத்துக்குமாருக்கு இசை வழியாக அஞ்சலி செலுத்தும் நிகழ்வாக இந்த இன்னிசை நிகழ்ச்சி அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியின் மூலம் கவிதை இலக்கியத்தை இசை வழியாக இளைஞர்களிடம் கொண்டு செல்வது, திரையிசைப் பாடல்கள் வழியாக கவிதை படைக்கும் திறனை ஊக்குவிப்பது, இடைநிலைப் பள்ளி மாணவர்களிடையே தமிழ் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தை வளர்ப்பது மற்றும் இலக்கியத்தையும் இன்னிசையையும் இணைக்கும் புதிய வடிவ நிகழ்ச்சியை உருவாக்குவது ஆகியவை முக்கிய நோக்கங்களாகக் கூறப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திரைப்படப் பாடலாசிரியர் சினேகன், நா. முத்துக்குமாரின் நினைவுகளையும் அவரது பாடல்களின் சிறப்புகளையும் பகிர்ந்து கொள்ளவுள்ளார். மேலும், மலேசிய துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தலைமை தாங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.
‘ஆனந்த யாழை மீட்டுகிறாய் – கருத்தும் கவியும்’ இன்னிசை நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 12, 2026 (சனிக்கிழமை) மாலை 6.00 மணிக்கு சிலாங்கூரின் பத்து கேவ்ஸில் அமைந்துள்ள ஷெங்கா கன்வென்ஷன் ஹாலில் நடைபெறவுள்ளது.







