சரவாக், 22 ஜூன் 2026 : சரவாக்கில் நடைபெற்ற கவாய் டாயாக் இரவு விருந்தில் கலந்து கொண்ட பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம், சரவாக்கின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் மத்திய அரசு தொடர்ந்து முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில், சரவாக் மாநில ஆளுநர் துன் பெஹின் ஸ்ரீ டாக்டர் ஹாஜி வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபர் மற்றும் தோ புவான் டத்துக் பதிங்கி ஹாஜா ஃபௌசியா முகமது சனுசி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மதானி அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து, கவாய் டாயாக் மற்றும் காமத்தான் கொண்டாட்டங்களில் ஆண்டுதோறும் பங்கேற்று வருவதாக தெரிவித்த பிரதமர், இன நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கு சரவாக் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்றார். ‘செகுலாய் செஜலாய்’ என்ற ஒற்றுமை உணர்வு, பல்வேறு இன மக்களிடையே புரிந்துணர்வையும் நட்புறவையும் மேலும் வலுப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.



1963-ஆம் ஆண்டின் மலேசிய ஒப்பந்தத்தின் (MA63) அடிப்படையில், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பல விவகாரங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பிந்துலு துறைமுகத்தின் நிர்வாகத்தை சரவாக் அரசிடம் ஒப்படைத்தது, மாநிலத்தின் திறன் மீதான மத்திய அரசின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகும் என்றார்.
மேலும், ரஷ்யா, துர்க்மெனிஸ்தான் மற்றும் ஜப்பானுக்கான தனது அண்மைய பயணங்களின்போது, உலகத் தலைவர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்புகளில், எரிசக்தித் துறையில் சரவாக்கின் திறனையும், அதன் எதிர்கால பொருளாதாரப் பங்களிப்பையும் தொடர்ந்து வலியுறுத்தியதாக பிரதமர் தெரிவித்தார்.
பெட்ரோனாஸ் மற்றும் பெட்ரோஸ் நிறுவனங்களுக்கு இடையிலான நிலுவைப் பிரச்சினைகள் நியாயமான முறையிலும் பரஸ்பர ஒத்துழைப்புடனும் தீர்க்கப்பட வேண்டும் என்றும், இந்த இரு நிறுவனங்களின் நெருங்கிய கூட்டாண்மை சரவாக் மற்றும் மலேசியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசும் சரவாக் அரசும் ஒரே அணியாக இணைந்து செயல்படுவதாக தெரிவித்த பிரதமர், அமைதியான, வளமான மற்றும் அனைவருக்கும் பயனளிக்கும் மலேசியாவை உருவாக்கும் முயற்சி தொடரும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.






