என் தமிழ்

ONSA 2025 : சமூக ஊடக பாதிப்பிலிருந்து இளம் தலைமுறையைப் பாதுகாக்கும் நடவடிக்கை

கோலாலம்பூர், 02 ஜூன் 2026 : சமூக ஊடகங்களின் தாக்கம் என்பது வெறும் தொழில்நுட்பப் பிரச்சினை மட்டுமல்ல; அது குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உணர்வு, சமூக மற்றும் மனநல வளர்ச்சியையும் பாதிக்கும் முக்கிய சவாலாக மாறியுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனை எதிர்கொள்ளும் ஆரம்பக் கேடயமாக 2025ஆம் ஆண்டின் இணையப் பாதுகாப்புச் சட்டம் (ONSA 2025) அமையும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தின் (UPSI) கல்வி உளவியல் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் சதீஷ் ராவ் அப்பளநாயுடு கூறுகையில், 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இன்னும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல், முடிவெடுத்தல் மற்றும் அபாயங்களை மதிப்பிடுதல் போன்ற வளர்ச்சிக் கட்டத்தில் உள்ளனர் என்றார்.

சமூக ஊடகங்களில் ‘லைக்’கள் மற்றும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையைத் தேடும் கலாச்சாரம், சமூக அழுத்தம் மற்றும் பயனர்களை நீண்ட நேரம் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அல்காரிதம்கள் ஆகியவை இளம் தலைமுறையின் நடத்தை மற்றும் மனநிலையை பாதிக்கும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“தற்போது தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படாவிட்டால், அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் தொழில்நுட்ப அறிவு கொண்டிருந்தாலும், உணர்வுரீதியாக பலவீனமான, பதற்றம் நிறைந்த மற்றும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தலைமுறையை நாம் எதிர்கொள்ள நேரிடலாம்” என்று அவர் எச்சரித்தார்.

இதனிடையே, மலாயா அறிவியல் பல்கலைக்கழகத்தின் (USM) கல்வியியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ஜமால்சாப்ரி சைபோன், சமூக ஊடகங்களில் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கூறினார். இணைய வழி தொல்லைகள், மோசடிகள், பாலியல் சுரண்டல், பொருத்தமற்ற உள்ளடக்கங்கள் மற்றும் உணர்வுரீதியான அழுத்தங்கள் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என்றார்.

16 வயதிற்குட்பட்டவர்களுக்கு புதிய சமூக ஊடகக் கணக்குகள் தொடங்குவதை கட்டுப்படுத்தும் ONSA 2025 சட்டம் நல்ல தொடக்கமாக இருந்தாலும், அதுமட்டுமே போதாது என்று அவர் வலியுறுத்தினார். டிஜிட்டல் அறிவாற்றல் கல்வி, பெற்றோரின் கண்காணிப்பு, பள்ளிகளின் பங்கு மற்றும் சமூக ஊடகத் தளங்களின் பொறுப்புணர்வு ஆகியவை இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ONSA 2025 சட்டத்தின் கீழ், 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் புதிய சமூக ஊடகக் கணக்குகளைப் பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த நடவடிக்கை குழந்தைகளை டிஜிட்டல் உலகின் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

Scroll to Top