கோலாலம்பூர், 28 மே 2026 : மலேசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் எதிர்கால உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய நீண்டகால மற்றும் ஒருங்கிணைந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என கசானா ஆராய்ச்சி நிறுவனம் (Khazanah Research Institute – KRI) வலியுறுத்தியுள்ளது.
KRI வெளியிட்ட சமீபத்திய ஆய்வு அறிக்கையில், உணவு உற்பத்தி அதிகரிப்பது அல்லது இறக்குமதியை குறைப்பது மட்டுமே தீர்வாக இருக்காது என்றும், வெளிப்புற அழுத்தங்களால் பாதிக்கப்படாத வலுவான உணவுக் கட்டமைப்பை உருவாக்குவதே முக்கிய சவாலாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசியான் நாடுகள் தேசிய நடவடிக்கைகள், தகவல் பகிர்வு, அவசரகால உணவுக் கையிருப்பு நிர்வாகம் மற்றும் வேளாண் உற்பத்தி கண்காணிப்பு ஆகியவற்றில் மேலும் ஆழமான பிராந்திய ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும் என அறிக்கை தெரிவித்துள்ளது.
ASEAN Plus Three Emergency Rice Reserve (APTERR), ASEAN Food Security Information System (AFSIS), ASEAN Integrated Food Security Framework (AIFS) மற்றும் Strategic Plan of Action on Food Security (SPA-FS) போன்ற அமைப்புகளை அதிக பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், “ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட தன்னிறைவு” என்ற புதிய அணுகுமுறையை ASEAN நாடுகள் பின்பற்ற வேண்டும் என KRI வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் நாடுகள் உள்நாட்டு உணவு உற்பத்தியை வலுப்படுத்தியபடியே, பிராந்திய வர்த்தக உறவுகளையும் பராமரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம், உலகளாவிய வர்த்தக பாதிப்புகள், எரிசக்தி மற்றும் உர இறக்குமதி சார்பு போன்ற காரணிகள் ASEAN பிராந்திய உணவுப் பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொழில்நுட்பம், நிலையான வேளாண்மை மற்றும் பிராந்திய கூட்டாண்மை ஆகியவற்றில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் KRI கேட்டுக்கொண்டுள்ளது.






