பட்டர்வொர்த், 28 மே 2026 : சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட செபராங் பிறை, தெலுக் ஆயிர் தாவார் பகுதியில் அமைந்துள்ள பெர்சத்துவான் தேவி ஸ்ரீ கோலவிழிலியம்மன் ஆலயத்தின் மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவாக, மலேசிய இந்து சங்கம் (MHS) பட்டர்வொர்த் பேரவை நிதியுதவி வழங்கியது.
இந்த நிதி ஒப்படைப்பு நிகழ்ச்சி கடந்த மே 22, 2026 (வெள்ளிக்கிழமை) மாலை 7.30 மணிக்கு நடைபெற்றது. இயற்கை பேரிடரால் சேதமடைந்த ஆலயத்தின் புனரமைப்பு மற்றும் மீள்கட்டுமானப் பணிகளுக்கு உதவும் நோக்கில், ஆலய நிர்வாகத்திடம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 30, 2026 அன்று ஏற்பட்ட இயற்கை பேரிடர் காரணமாக ஆலயம் மற்றும் அதன் வளாகம் பாதிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மறுசீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த உதவித் திட்டத்திற்கு ஆதரவளித்த அனைத்து நன்கொடையாளர்கள், நலன்விரும்பிகள் மற்றும் சமூக அக்கறை கொண்ட பொதுமக்களுக்கும் மலேசிய இந்து சங்கம் பட்டர்வொர்த் பேரவை தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
“சமூக ஒற்றுமை, பரஸ்பர உதவி மற்றும் ஆன்மிகப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். இந்த நிதியுதவி ஆலயத்தின் மீளுருவாக்கப் பணிகளுக்கு பயனளிக்கும் என்று நம்புகிறோம்” என பேரவை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சமூக சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மலேசிய இந்து சங்கம் பட்டர்வொர்த் பேரவை, எதிர்காலத்திலும் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும் தனது பணியை தொடரும் என்றும் உறுதியளித்தது.
“அன்பே சிவம்” என்ற உயரிய தத்துவத்தை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் பேரவையின் இந்த மனிதநேயப் பணி சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.




