என் தமிழ்

செந்தமிழ் மற்றும் மொழி விழாவில் ரிவர்சைட் மாணவர்கள் சாதனை

கோலா சிலாங்கூர், 09 மே 2026 : ரிவர்சைட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற ஒற்றுமை விழா, செந்தமிழ் விழா மற்றும் மொழி விழா போட்டிகளில் சிறப்பாகப் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

மலாய் மொழி பேச்சுப் போட்டியில் முகமாட் ஷஹாடாட் ஹசான் முதல் இடத்தைப் பெற்றார். மலாய் மொழி கதை சொல்லும் போட்டியில் கதிரவன் சரவணன் நான்காம் இடத்தையும், தமிழ்ப் பேச்சுப் போட்டியில் ருத்தர கல்யாணி விஜயன் நான்காம் இடத்தையும் கைப்பற்றினர். கவிதைப் போட்டியில் யஷ்வினி விஜயன் மூன்றாம் இடத்தையும், சொற்குவியல் போட்டியில் ஷாஷினி பிரபு மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

கையெழுத்துப் போட்டியில் தீபநாதன் கோபிநாதன் இரண்டாம் இடம், நிவேதா ஸ்ரீ சிவகுரு நான்காம் இடம் மற்றும் துர்காஷினி விஜயகுமார் ஐந்தாம் இடம் பெற்றனர். மேலும், சவிதா ஸ்ரீ யாகவன் மற்றும் தனுஜா ராஜ்குமார் ஆகியோர் ஆறுதல் பரிசுகளை வென்றனர்.

மாணவர்களின் இந்த வெற்றிகள், அவர்களின் திறமை, விடாமுயற்சி மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான பயிற்சியின் பலனாகும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி விஜயலட்சுமி பழனியாண்டி அவர்கள் அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்ததுடன், மாணவர்களை சிறப்பாகப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மாணவர்களின் இந்தச் சாதனை பள்ளி சமூகத்தினரிடையே மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.

Scroll to Top