லங்காவி, 20 ஏப்ரல் 2026 : லங்காவி சுற்றுலா தீவுக்கு செல்லும் படகு சேவை குறைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்க அரசாங்கம் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த பிரச்சினை சுற்றுலா துறையையும், அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பாதித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை குவா பயணிகள் ஜெட்டி முன்பாக நடைபெற்ற அமைதியான பொதுக்கூட்டத்தில், பல்வேறு அரசல்லாத அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கேடா மாநிலத்தைச் சேர்ந்த Anak Muda MADANI அமைப்பின் தலைவர் டத்துக் சுராய்டி ரஹிம் கூறுகையில், கடந்த மார்ச் 25 முதல் ferry சேவை தினசரி ஐந்து பயணங்களில் இருந்து மூன்றாகக் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த சேவை குறைப்பின் காரணமாக, லங்காவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருவதாகவும், இது தீவின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, ferry சேவையை மீண்டும் அதிகரித்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைக்கும் வகையில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.







