என் தமிழ்

ரமலான் காலத்தில் சமூகத்திற்கு உதவியாக ‘LazadaForGood’ முயற்சி

கோலாலம்பூர், 10 மார்ச் 2026 : ரமலான் மாதத்தை முன்னிட்டு சமூக ஒற்றுமை மற்றும் உதவி மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில், லசாடா மலேசியா தனது ‘LazadaForGood’ முயற்சியின் மூலம் உள்ளூர் ரமலான் பஜார் விற்பனையாளர்களுக்கு ஆதரவு வழங்கி, வாங்கப்பட்ட உணவுகளை சமூகத்துடன் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

இந்த முயற்சியின் மூலம் பாங்க்சார் ரமலான் பஜார் மற்றும் சேரி சென்டோசா ரமலான் பஜாரில் உள்ள உள்ளூர் விற்பனையாளர்களிடம் இருந்து உணவுகள் வாங்கப்பட்டு, நோன்பு திறக்கும் நேரமான இப்தாருக்கு முன்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ரமலான் காலத்தில் உள்ளூர் சமூகங்களுக்கும் சிறு வியாபாரிகளுக்கும் ஆதரவளிக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ரமலான் பஜார்கள் உணவுகளை மட்டுமல்லாமல், கடின உழைப்புடன் வாழ்வாதாரத்தை நடத்தும் சிறு தொழில்முனைவோரின் முயற்சிகளையும் பிரதிபலிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு, லசாடா மலேசியா அந்த விற்பனையாளர்களின் உழைப்பை மதிப்பளித்து, அவர்களின் உணவுகளை வாங்கி சமூகத்துடன் பகிர்ந்தளிக்கும் திட்டத்தை செயல்படுத்தியது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக மார்ச் 3ஆம் தேதி, மலேசிய நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர் டேனியல் சேயாங், பாங்க்சார் ரமலான் பஜாரில் லசாடா குழுவுடன் இணைந்தார். அங்கு வாங்கப்பட்ட உணவுகள் பின்னர் மஸ்ஜித் சயிடினா அபு பக்கர் அஸ்-சித்திக் பள்ளிவாசலில் நோன்பு திறக்க கூடியிருந்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

அதேபோல், மார்ச் 8ஆம் தேதி சேரி சென்டோசா ரமலான் பஜாரில் நடைபெற்ற நிகழ்வில் பிரபல சமூக ஊடக ஆளுமைகளான ‘தி பிரிட்டி மாமாஸ்’ மற்றும் மலேசிய தொடர்புத்துறை அமைச்சர் யாங் பெர்ஹோர்மத் டத்துக் ஃபஹ்மி ஃபட்ஸில் கலந்து கொண்டனர். அவர்கள் அங்கு உள்ள விற்பனையாளர்களை சந்தித்து, ரமலான் மாதத்தில் அவர்கள் மேற்கொள்ளும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் நேரில் அறிந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் போது வாங்கப்பட்ட உணவுகள் மஸ்ஜித் சயிடினா அபு பக்கர் அஸ்-சித்திக் மற்றும் மஸ்ஜித் அல்-இமாம் அத்-திர்மிசி பள்ளிவாசல்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அஸர் தொழுகைக்குப் பிறகும் இப்தார் நேரத்திலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொடர்புத்துறை அமைச்சர் டத்துக் ஃபஹ்மி ஃபட்ஸில் கூறுகையில், ரமலான் மாதத்தில் இதுபோன்ற சமூகப் பணிகள் கருணை, ஒற்றுமை மற்றும் பொறுப்புணர்வை வளர்க்கும் முயற்சிகளாக இருப்பதாக தெரிவித்தார். இத்தகைய திட்டங்கள் சிறு தொழில்முனைவோர்களுக்கும் சமூகத்திற்கும் ஒரே நேரத்தில் பயன் அளிப்பதோடு, சமூக உறவுகளையும் வலுப்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.

லசாடா மலேசியாவின் அரசாங்க விவகாரங்கள் மற்றும் பொது கொள்கை துணைத் தலைவர் கைரில்அஹ்மத் கூறுகையில், “நம்பிக்கை என்பது ஒரு வாக்குறுதி மட்டுமல்ல, அதை செயல்பாடுகளின் மூலம் தொடர்ந்து நிரூபிக்க வேண்டிய பொறுப்பாகும். ‘LazadaForGood’ போன்ற முயற்சிகள் மூலம் டிஜிட்டல் உலகத்தைத் தாண்டி உள்ளூர் வியாபாரிகளுக்கும் சமூகத்திற்கும் ஆதரவளிக்க நாம் உறுதியாக செயல்பட்டு வருகிறோம்,” என்றார்.

உள்ளூர் வியாபாரிகளை வலுப்படுத்துவதோடு சமூகத்திற்கும் நேரடி நன்மை அளிக்கும் வகையில் இந்த முயற்சி அமைந்துள்ளது. சமூக ஈடுபாடையும் டிஜிட்டல் வணிக சூழலையும் இணைக்கும் முயற்சியாக ‘LazadaForGood’ தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. ரமலான் மாதத்தின் கருணை, பகிர்வு மற்றும் ஒற்றுமை ஆகிய மதிப்புகளை பிரதிபலிக்கும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது.

Scroll to Top