கோலாலம்பூர், 03 மார்ச் 2026 : Kelly Fine Arts நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள “ஆரம்பா 3.0” பரதநாட்டிய அரங்கேற்றம் வருகிற 8 மார்ச் 2026 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு Shantanand Auditorium அரங்கில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் சாந்தியா சந்திரன் (48) மற்றும் மலானி ராஜூ (40) ஆகியோர் பரதநாட்டிய அரங்கேற்ற மேடையில் முதன்முறையாக கலைநிகழ்ச்சி வழங்குகின்றனர். வயது ஒரு கட்டுப்பாடு அல்ல என்பதையும், ஆர்வம் மற்றும் விடாமுயற்சி இருந்தால் எந்தக் கனவையும் அடைய முடியும் என்பதையும் இவர்களின் பயணம் வெளிப்படுத்துகிறது.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நடைபெறும் இந்த அரங்கேற்றம், பெண்களின் உறுதி, தன்னம்பிக்கை மற்றும் சாதனை மனப்பாங்கை முன்னிறுத்துவதாக அமைந்துள்ளது. பல ஆண்டுகளாகப் பயிற்சி மேற்கொண்டு வந்த இவர்களின் அர்ப்பணிப்பு இந்த மேடைநிகழ்ச்சியின் மூலம் கலைவுலகில் பதிவு செய்யப்படுகிறது.
“ஆரம்பா 3.0” நிகழ்ச்சி பரதநாட்டியத்தின் பாரம்பரிய வடிவங்களான அலாரிப்பு, ஜதிஸ்வரம், வரணம் மற்றும் தில்லானா போன்ற கூறுகளை உள்ளடக்கிய விரிவான கலைநிகழ்ச்சியாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் கலந்துகொள்ள கலைவிரும்பிகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரு பெண்களின் கலைப் பயணத்தை கொண்டாடும் இந்த அரங்கேற்றம், சர்வதேச மகளிர் தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.






