ஆடவரைக் கொலை செய்ததாக போக்குவரத்து போலீசார் மீது குற்றச்சாட்டு
கூச்சிங், 07/05/2025 : கடந்த மாதம், ஜாலான் ஸ்டீபன் யோங்கில் ஆடவரைக் கொலை செய்ததாக, லென்ஸ் கோப்ரல் பதவிக் கொண்ட புக்கிட் அமான் போக்குவரத்து போலீஸ் ஒருவர், இன்று கூச்சிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
ஏப்ரல் 26-ஆம் தேதி, கூச்சிங், ஜாலான் ஸ்டீபன் யோங்கில் காரில் இருந்த 34 வயதான முஹமட் சக்கி இட்ருஸைத் துப்பாக்கியால் சுட்டு கொன்றதாக, 30 வயதான ஜெனிசிஸ் நிட்செல் டேவிட் ரெட்டி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மாஜிஸ்திரேட் ஷரிஃபா ஃபதிமா அசுரா வான் அலி முன்னிலையில் தம் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, ஜெனிசிஸ் அதை புரிந்ததாக தலையசைத்தார்.
எனினும், கொலை வழக்கு உயர் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால், அவரிடமிருந்து எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரணத் தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்கு குறையாத 40 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை மற்றும் 12-க்கும் குறையாத பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
சம்பவம் தொடர்பான வேதியியல் அறிக்கைக்காக அரசு தரப்பு காத்திருக்கும் நிலையில், இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு ஜூன் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Source : Bernama
#CrimeNews
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews