உலகம்மலேசியா

மாலத்தீவு அதிபர் மலேசியா வருகை

புத்ராஜெயா, 27/04/2025 : பல்வேறு துறைகளைக் கடந்த இருவழி உறவை வலுப்படுத்த மாலத்தீவு அதிபர் டாக்டர் முஹமட் முயிசு, இன்று தொடங்கி ஏப்ரல் 30-ஆம் தேதி வரை மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.

2023-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி மாலத்தீவு அதிபராக நியமிக்கப்பட்டதிலிருந்து, அவர் மலேசியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

நாளை, புத்ராஜெயா பெர்டானா புத்ரா வளாகத்தில் டாக்டர் முஹமட் முயிசுவிற்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு நல்கப்படவிருப்பதை அடுத்து, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இரு தரப்பு சந்திப்பு நடைபெறும்.

இரு தலைவர்களும் மலேசியா மற்றும் மாலத்தீவுக்கு இடையிலான இருவழி உறவு மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள், குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீடு, ஹலால் தொழில்துறை, கல்வி, சுற்றுலா உட்பட இளைஞர் மற்றும் விளையாட்டு துறைகள் குறித்து கலந்துரையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரஸ்பர ஆர்வமுள்ள வட்டார மற்றும் அனைத்துலக பிரச்சினைகள் குறித்த கருத்துக்களையும் அவர்கள் பரிமாறிக் கொள்ளவிருப்பதோடு, சுற்றுலா, விளையாட்டு மற்றும் சுகாதாரத் துறைகளில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படவுள்ளன.

2023-ஆம் ஆண்டு 82 கோடியே 73 லட்சம் ரிங்கிட்டாக இருந்த இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், கடந்தாண்டு 4.3 விழுக்காடு உயர்வுக் கண்டு 86 கோடியே 27 லட்சம் ரிங்கிட்டாக பதிவானது.

தெற்காசிய நாடுகளில் மலேசியாவின் ஆறாவது பெரிய வர்த்தக பங்காளியாக மாலத்தீவு உள்ளது.

Source : Bernama

#MaldivesMalaysia
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews