என் தமிழ்

பினாங்கில் அடிக்கடி விபத்துகள் & நெரிசல் ஏற்படும் 8 பகுதிகளில் போலீஸ் தீவிரம்

பினாங்கு, 29/03/2025 : ‘Op Selamat 24 Aidilfitri 2025’ நடவடிக்கையின் போது சீரான போக்குவரத்து தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அடிக்கடி விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் எட்டு பகுதிகளில் பினாங்கு போலீஸ் கவனம் செலுத்துகிறது.

இன்று தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை ஆறு நாள்களுக்கு மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கை, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, மாநிலத்தின் முக்கிய வழித்தடங்களைக் கண்காணிப்பது போன்ற நோக்கத்தைக் கொண்டிருப்பதாக பினாங்கு போலீஸ் துணைத் தலைவர் டத்தோ முஹமட் அல்வி சைனால் அபிடின் தெரிவித்தார்.

“நாங்கள் சில இடங்களுக்கு குறி வைத்துள்ளோம். சம்பந்தப்பட்ட அந்த எட்டுப் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். போக்குவரத்து பணியாளர்கள் அங்கே பணிக்கு அமர்த்தப்படுவர். இம்முறை போக்குவரத்து கண்காணிப்பு மட்டுமல்ல.இந்த ஓப்ஸ் செலாமாட்டை வெற்றி பெறச் செய்ய பிடிஆர்எம் மோட்டார் ரோந்து பணியாளர்களும் கடமையாற்றுவர்”, என்றார் அவர்.

இதைத் தவிர்த்து அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், கைப்பேசிகளைப் பயன்படுத்துதல், இரட்டை கோடுகளை முந்திச் செல்தல், அவசர பாதைகளைப் பயன்படுத்துதல், சமிக்ஞ்சை விளக்குகளை மீறுதல் போன்ற ஆறு முக்கிய குற்றங்களைச் செய்வோர் மீது உடனடியாக அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த Op Selamat காலக்கட்டம் முழுவதும் பினாங்கு மாநிலத்தில் இம்முறை 26 லட்சம் வாகனங்கள் நுழையும் என்று தாங்கள் கணிப்பதாக டத்தோ முஹமட் அல்வி கூறினார்.

2023ஆம் ஆண்டு Op Selamat நடவடிக்கையின் போது 681 விபத்துகள் பதிவாகியிருந்த வேளையில், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 777-ஆக உயர்வு கண்டிருந்தது என்றும் டத்தோ முஹமட் அல்வி சைனால் தெரிவித்தார்.

Source : Bernama

#Penang
#Ramadan
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

 

Scroll to Top