என் தமிழ்

போதைப் பொருள் கடத்தல்; தம்பதியர் உட்பட நால்வர் கைது

ரவூப், 22/03/2025 : கடந்த புதன்கிழமை பகாங், ரவூப்பில் தம்பதியர் உட்பட நால்வரைக் கைது செய்ததன் வழி போதைப் பொருள் கடத்தல் கும்பல் ஒன்றை போலீஸ் வெற்றிகரமாக முறியடித்தது.

ஓர் இந்னோனேசிய ஆடவர் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட 37 முதல் 59 வயதிற்குட்பட்ட அவர்கள் அனைவரும், பிற்பகல் மணி 3.30 அளவில், இரு கார்களில் மேற்கொண்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ யாஹ்யா ஒத்மான் தெரிவித்தார்.

அவர்கள் பயணித்த Toyota Vios மற்றும் Nissan Navara ரக கார்களை சோதனையிட்ட போது, நான்கு லட்சத்து 21,286 ரிங்கிட் மதிப்புடைய 13 கிலோ கிராம் அளவிலான ஷாபு மற்றும் கஞ்சா வகை போதைப் பொருளைப் போலீசார் கண்டெடுத்ததாக அவர் கூறினார்.

கடந்த மூன்று மாத காலமாக செயல்பட்டு வரும் இக்கும்பல், கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து போதைப் பொருளைப் பெற்று, பகாங்கில் விநியோகம் செய்வதுடன் அண்டை நாடுகளுக்கும் கொண்டு செல்வது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்செயலில் மற்றவர்கள் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து தமது தரப்பு விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் டத்தோ ஶ்ரீ யாஹ்யா குறிப்பிட்டார்.

“கைது செய்யப்பட்ட அவர்கள் மீது போதைப் பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான முந்தைய பதிவுகள் உள்ளன. மற்றவர்கள் போதைப் பொருளை உட்கொள்ளவில்லை,” என்றார் அவர்.

1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம் செக்‌ஷன் 39B-இன் கீழ், மேல் விசாரணைக்காக, கைது செய்யப்பட்ட அந்நால்வரும் மார்ச் 26ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்படுவர்.

Source : Bernama

#DrugTrafficking
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Scroll to Top