சிரம்பான், 21/03/2025 : நோன்புப் பெருநாளை முன்னிட்டு, மார்ச் 24 தொடங்கி ஏப்ரல் ஏழாம் தேதி வரையில், நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளால், சாலையை மூடும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படும்.
அனைத்து நிறுவனங்களின் செயல்பாட்டு நடவடிக்கை தேதிகளுக்கு ஏற்ப இம்முடிவு எடுக்கப்பட்டதாக, பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம், சாலைப் போக்குவரத்து துறை, ஜே.பி.ஜே, உட்பட மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆகியவையே அந்த நிறுவனங்கள் என்று நந்தா லிங்கி கூறினார்.
“இந்த நெடுஞ்சாலை தடங்களை மூடும் தடை, அவசரகால பணிகளை உட்படுத்தாது. இது அமைச்சால் வெளியிடப்பட்ட வழக்கமான ஓர் உத்தரவு. அதாவது, எந்த கட்டுமான மற்றும் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படக் கூடாது. ஏனெனில் அது இடையூறாக இருக்கும் மற்றும் நெரிசலை ஏற்படுத்தும். பெருநாள் காலத்தில் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவது அனைவரும் அறிந்ததே,” என்றார் அவர்.
இன்று, சிரம்பான் – கோல பிலா சாலையின் கூடுதல் வழித்தடத்தை திறந்து வைத்தப் பின்னர், நந்தா லிங்கி அவ்வாறு கூறினார்.
இதனிடையே, 2023-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, MYJalan செயலி மூலம், பழுதடைந்த சாலைகள் குறித்து 28,000-க்கும் அதிகமான புகார்களை பொதுப்பணித் துறை பெற்றதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அவற்றில் 30 விழுக்காடு மட்டுமே பொதுப்பணித் துறை மேற்பார்வையின் கீழ் உள்ள சாலைகளாகும்.
எஞ்சியவை நகராட்சி மற்றும் மாநில அரசின் மேற்பார்வையின் கீழ் உள்ளன.
Source : Bernama
#Ramadan
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews