செராஸில் 2 கோழி அறுப்பு தொழிற்சாலைகள் மீது சோதனை
செராஸ், 13/03/2025 : செராஸ் சுற்று வட்டாரத்தில் சட்டவிரோதமாகவும் தூய்மையற்ற நிலையிலும் இயங்கி வந்ததாகக் கண்டறியப்பட்ட இரண்டு கோழி அறுப்பு தொழிற்சாலைகளில், நேற்றிரவு அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நடவடிக்கையின்போது, அவ்விரு தொழிற்சாலைகளில் இருந்தும் மூவாயிரம் கிலோகிராம் எடையிலான சுமார் 28 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய கோழிகள் கைப்பற்றப்பட்டன.
முன்னதாக, கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் அவ்விரு தொழிற்சாலைகளும் தங்களின் செயல்பாடுகளை நிறுத்தும்படி, அமலாக்க நிறுவனம் அறிவிக்கையை வழங்கியிருந்தது.
கோலாலம்பூர் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சு, கேபிடிஎன், மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையுடன் இணைந்து, கடந்த இரண்டு வாரங்களாக Op Pantau 2025 நடவடிக்கையை மேற்கொண்டது.
உரிமம் பெறாத கோழி இறைச்சி கூடங்களின் செயல்பாடுகள் மற்றும் ஹலால் விதிமுறைகளுக்கு முரணாக செயல்படுவதை தவிர்க்க, இந்த அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கோலாலம்பூர் கேபிடிஎன் இயக்குநர் முஹமட் சப்ரி செமான் தெரிவித்தார்.
“அனைவரும் வழங்கிய தகவலின் அடிப்படையில் கோழி விற்பனை செய்யும் தரப்பினரின் சந்தேகத்திற்கிடமான சூழலை முன்னிறுத்தி உளவுத்துறை மற்றும் கேபிடிஎன் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக மேற்கொண்ட கண்காப்பு நடவடிக்கையின் கீழ் இன்று இரவு இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது”, என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு நாளும் இரவு மணி 8.00 முதல் பின்னிரவு மணி 3.00 வரை இயங்கும் இந்த கோழி அறுப்பு தொழிற்சாலைகளில் வெளிநாட்டினரே வேலை செய்து வருகின்றனர்.
நேற்று இரவு மணி 11-க்கு தொடங்கி, நான்கு மணி நேரத்திற்கு நடத்தப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில் இந்தியா மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 26 அந்நிய நாட்டினரும் கைது செய்யப்பட்டனர்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews