என் தமிழ்

அடிப்படை உணவுப் பொருட்களுக்கு நிலையான விலையை உறுதி செய்வதில் ஆதரவு தேவை

கோலாலம்பூர், 05/02/2025 : பண்டிகைக் காலத்தில் தேங்காய் போன்ற அடிப்படை உணவுப் பொருட்களுக்கு நிலையான விலையை உறுதி செய்யும் வகையில், உதவித் தொகை உட்பட பொருள் அனுப்பும் நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியான ஆதரவு தேவைப்படுகிறது.

தைப்பூச கொண்டாட்டம் நெருங்கி வருவதால், தேங்காய்க்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அதன் விநியோகச் சங்கிலியில் அழுத்தம் ஏற்பட்டு விலை உயர்வுக்கு இட்டுச் சென்றுள்ளதாக, கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழில்துறை சம்மேளனம், K-L-S-I-C-C-I தலைவர் நிவாஸ் ராகவன் தெரிவித்தார்.

அதோடு, டீசல் எரிபொருளுக்கு வழங்கப்படும் இலக்கிடப்பட்ட உதவித் தொகை மறுபரிசீலனை செய்யப்பட்டிருப்பது போக்குவரத்து செலவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிவாஸ் கூறினார்.

இதனால், மொத்த விற்பனையாளர்கள் தரப்பில் விலையுயர்வு, குறைந்த அளவிலான கையிருப்பு மற்றும் பொருள் அனுப்பும் சேவையில் சுணக்கம் போன்ற பிரச்சனைகளால் சிறுதொழில் வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, பல சிறு வியாபாரிகள் இறுக்கமான நிதி கையிருப்பில் செயல்படும் வேளையில், அதிகமான பொருள்களை வாங்கி வைத்துக்கொள்ள முடியாத சூழலும் ஏற்படுவதாக நிவாஸ் ராகவன் பெர்னாமா தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.

Source : Bernama

#NiwasRaghavan
#KLSICCI
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia