பி.இ., கலந்தாய்வில் 53,526 இடங்கள் நிரம்பின: இதுவரை 20,256 பேர் 'ஆப்சென்ட்'

பி.இ., கலந்தாய்வில் 53,526 இடங்கள் நிரம்பின: இதுவரை 20,256 பேர் 'ஆப்சென்ட்'

be

கடந்த, 7ம் தேதி துவங்கிய பி.இ., சேர்க்கை பொதுப்பிரிவு கலந்தாய்வில், நேற்று முன்தினம் வரை, 53,526 இடங்கள் நிரம்பின. இன்னும், 1.5 லட்சம் இடங்கள் காலியாக உள்ள நிலையில், இதுவரை, 20,256 பேர், ‘ஆப்சென்ட்’ ஆகியுள்ளனர்.

பி.இ., பொதுப்பிரிவு சேர்க்கை கலந்தாய்வு, கடந்த, 7ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை, தொடர்ச்சியாக, 15 நாட்கள் நடந்துள்ளன. தொடர்ந்து, ஆகஸ்ட், 4ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது. இதுவரை நடந்த கலந்தாய்வில், 53,526 இடங்கள் நிரம்பி உள்ளன. இன்னும், 1,50,319 இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், தினமும், ‘ஆப்சென்ட்’ ஆகும் மாணவர்கள் எண்ணிக்கை, அண்ணா பல்கலையை, கவலை அடையச் செய்துள்ளது. இதுவரை, 20,256 பேர், ‘ஆப்சென்ட்’ ஆகியுள்ளனர். ஒவ்வொரு நாளும், 1,000 பேருக்கு குறையாமல், ‘ஆப்சென்ட்’ ஆகின்றனர். மொத்த இடங்களில், இதுவரை, 26.26 சதவீத மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

எந்த பாடம் முதலிடம்:

ஒதுக்கீடு செய்யப்பட்ட பாட பிரிவுகளில், மெக்கானிக்கல் பிரிவு, முதலிடம் பிடித்து உள்ளது. இந்த பிரிவில், 11,503 பேர் சேர்ந்துள்ளனர். இ.சி.இ., – எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிக்கேஷன் இன்ஜினியரிங் பிரிவில், 11,029; சிவில் பிரிவில், 7,346; கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில், 7,041; இ.இ.இ., – எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில், 6,263; மற்றும் ஐ.டி., பிரிவில், 3,049 பேர் சேர்ந்துள்ளனர்.

தமிழ் மீடியம் நிலை:

கிண்டி பொறியியல் கல்லூரியில், சிவில் மற்றும் மெக்கானிக்கல் ஆகிய, இரு பிரிவுகள் மட்டும், தமிழ் வழியில் வழங்கப்படுகின்றன. இதில், சிவில் பிரிவில், மொத்தம் உள்ள, 659 இடங்களில், 78 இடங்களும், மெக்கானிக்கல் பிரிவில், 718 இடங்களுக்கு, 78 இடங்களும் நிரம்பி உள்ளன. முதல் தலைமுறை பட்டதாரிகளாக, 26,275 பேர் சேர்ந்துள்ளனர்.