என் தமிழ்

பாகிஸ்தானில் குர்ஆனை அவமதித்ததாக புகார் 2 கிறிஸ்தவர் உயிருடன் எரிப்பு

Tehrik-e-taliban-620x465

நவம்பர் 5,பாகிஸ்தானில், புனித குர்ஆனை அவமதித்ததாக எழுந்த புகாரின்பேரில், 2 கிறிஸ்தவர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், உள்ள கசூர் மாவட்டத்தில், கோட் ராதாகிஷான் என்ற கிராமம் உள்ளது. இங்கு புனித குர்ஆனை எரித்ததாக, ஷசாத் மசி 35, அவரது மனைவி ஷமா 31 ஆகிய 2 கிறிஸ்தவர்கள் மீது எழுந்த புகாரையடுத்து, அவர்கள் உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்டனர்.

இது குறித்து, அவர்களுடைய உறவினர் இமானுவேல் சர்ப்ராஜ் கூறும்போது, முகம்மது யூசுப் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில், ஷசாத்தும், ஷமாவும் வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால், தங்களுடைய 4 குழந்தைகளுடன், அவர்கள் வேலையை விட்டுச் செல்வதற்கு முடிவு செய்தனர். ரூ.5 லட்சம் அளித்தால் மட்டுமே, வெளியே செல்ல விடுவேன் என்று யூசுப் கூறியுள்ளார். இது தொடர்பாக இரு தரப்புக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று ஷசாத்தும், ஷமாவும் புனித குர்ஆனை எரித்து விட்டதாக மசூதியில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து குவிந்த ஏராளமான முஸ்லிம்கள் இருவரையும் உயிருடன் தீவைத்து எரித்து, செங்கல் சூளைக்குள் தூக்கி வீசினர். தாங்கள் அப்பாவிகள் என்று இருவரும் கதறி அழுதனர். ஆனால், அவர்களின் கூக்குரலை யாரும் பொருட்படுத்தவில்லை. புனித குர்ஆனை எரித்தார்கள் என்று தவறான தகவல் கொடுத்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கு யூசுப்தான் காரணம்.என்றார். இந்த சம்பவம் தொடர்பாக யூசுப் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Scroll to Top