என் தமிழ்

தாமான் எஹ்சான் திருவிழா : கோபிந்த் சிங் தியோ பங்கேற்பு

தாமான்சாரா, 05 செப்டம்பர் 2026 : தாமான்சாரா நாடாளுமன்றத் தொகுதியில் சமூக நல்லிணக்கத்தையும் மக்களின் நலனையும் பேணுவதில் சமூக அமைப்புகளின் பங்கு மிகவும் முக்கியமானது என தாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.

தை சூ யா புத்த அமைப்பு ஏற்பாடு செய்த தாமான் எஹ்சான் போ தோ திருவிழா கொண்டாட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி, அந்த அமைப்பு தொடங்கப்பட்டு 34 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் ஒட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பி106 தாமான்சாரா தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, நட்பு மற்றும் ஒற்றுமையுடன் நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மக்களிடையே நிலவும் நல்லுறவும் சமூக ஒற்றுமையும் இந்நிகழ்வில் வெளிப்பட்டதாக கோபிந்த் தெரிவித்தார்.

மேலும், தை சூ யா புத்த அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் 38 நோயாளிகளுக்கு தலா RM1,000 வீதம் மொத்தம் RM38,000 நிதியுதவி வழங்கப்பட்டது.

இதனிடையே, தாமான் எஹ்சான் பகுதியில் சுமார் 40 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த பழைய நிலத்தடி ஆஸ்பெஸ்டாஸ் குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்களை ஏர் சிலாங்கூர் நிறுவனம் மாற்றியமைக்க உள்ளதாக கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார். இதன் மூலம் அப்பகுதி மக்களின் நீண்டகால குடிநீர் தொடர்பான தேவைகளில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளூர் மக்களின் நலன் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது தொடர்ந்து தனது முக்கிய முன்னுரிமையாக இருக்கும் என்றும் கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.

Scroll to Top