கோலாலம்பூர், 30 ஆகஸ்ட் 2026 : 2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக தொழில்முனைவோர் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் (MSME) வளர்ச்சியை மையமாகக் கொண்டு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கம் (MAICCI) பங்கேற்றது.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சகம் (KUSKOP) மற்றும் SME Corp. Malaysia இணைந்து ஏற்பாடு செய்த இந்தக் கூட்டத்தில் MAICCI தலைவர் டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன் மற்றும் பொதுச் செயலாளர் தர்ஷனா எம்.எஸ். பாண்டியன் கலந்து கொண்டனர்.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில், வணிகத் துறையினரின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை நேரடியாகப் பகிர்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. பட்ஜெட் 2027-ல் தொழில்முனைவோர் மற்றும் MSME நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து வணிக அமைப்புகள் தங்களது கருத்துகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்தன.







