என் தமிழ்

வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீடு ஊழல் வழக்கு : டத்தோ எம்.சரவணன் மீது 3 குற்றச்சாட்டுகள்

28 ஆகஸ்ட் 2026 : மலேசியாவின் முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன், 2022-ஆம் ஆண்டு வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீட்டு விண்ணப்பங்களை அங்கீகரிக்க 10.97 லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜரான 58 வயதான சரவணன், TYKB Engineering Sdn Bhd நிறுவனத்திற்கு 1,000 வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீடுகளை அங்கீகரிப்பதற்காக மூன்று சந்தர்ப்பங்களில் பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டுகளின்படி, Vectica Resources Sdn Bhd நிறுவனத்தின் இயக்குநர் டான் டெக் லிம்மிடம் இருந்து சையத் அமிருல் சையத் அகமது மூலம் முறையே 1.5 லட்சம் மற்றும் 3.5 லட்சம் ரிங்கிட் ரொக்கமாக பெற்றதாகக் கூறப்படுகிறது.

மூன்றாவது குற்றச்சாட்டில், 5.97 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான காசோலையை பெற்று, அது Big Seven Ventures Sdn Bhd நிறுவனத்தின் Maybank Islamic கணக்கில் செலுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த மூன்று குற்றச்சாட்டுகளும் 2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் பிரிவு 16(a)(B)-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், லஞ்சத் தொகையின் ஐந்து மடங்கு அல்லது குறைந்தபட்சம் 10,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.

வழக்கை நீதிபதி அசுரா அல்வி விசாரித்து வருகிறார். சரவணன் தரப்பில் வழக்கறிஞர் டத்தோ கீதன் ராம் வின்சென்ட் ஆஜரானார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தரப்பில் மூத்த துணை இயக்குநர் டத்தோ அகமது அக்ரம் காரிப் வழக்கை நடத்தினார்.

Scroll to Top