16 ஆகஸ்ட் 2026 : பெண்களின் அந்தரங்க சுகாதாரத்தில் அதிகப்படியான சுத்தப்படுத்தும் பழக்கங்கள், உடலின் இயற்கையான நுண்ணுயிர் சமநிலையை பாதிக்கக்கூடும் என முதன்மை சுகாதார மருத்துவரும் Klinik Yap & Partners Malaysia நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநருமான டத்தோ டாக்டர் பிரையன்ட் யாப் சியோங் கியூர் தெரிவித்தார்.
பெண்களின் அந்தரங்க சுகாதாரம் குறித்து நீண்ட காலமாக நிலவி வரும் கருத்துகளில், அதிகமான பாக்டீரியாக்களை அழிப்பதே சிறந்த சுத்தம் என்ற எண்ணம் முக்கியமானதாக இருந்து வருகிறது. ஆனால், மருத்துவ மற்றும் அறிவியல் புரிதல்கள் வளர்ந்து வரும் நிலையில், உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை பாதுகாப்பதே முக்கியம் என அவர் குறிப்பிட்டார்.
பெண்களின் உடலில் இயற்கையாகவே பல்வேறு நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. அவற்றில் Lactobacillus எனப்படும் நன்மை தரும் பாக்டீரியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை அந்தரங்கப் பகுதியில் பொதுவாக 3.8 முதல் 4.5 வரையிலான சற்றே அமிலத்தன்மை கொண்ட pH சமநிலையை பராமரிக்க உதவுவதுடன், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் ஈஸ்ட் அதிகமாக வளர்வதை கட்டுப்படுத்தும் இயற்கையான சூழலை உருவாக்குகின்றன.
மாதவிடாய், ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், சில மருந்துகள், வாழ்க்கை முறை மற்றும் சில அந்தரங்க சுகாதாரப் பழக்கங்கள் உள்ளிட்ட காரணிகளால் இந்த இயற்கையான சமநிலையில் மாற்றங்கள் ஏற்படலாம். இதனால் எரிச்சல், அசாதாரண வெளியேற்றம், துர்நாற்றம், வறட்சி அல்லது அசௌகரியம் போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அடிக்கடி கழுவுதல், அதிக வாசனை கொண்ட பொருட்களைப் பயன்படுத்துதல், வலுவான கிருமிநாசினி தன்மை கொண்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துதல் மற்றும் மருத்துவ ஆலோசனையின்றி உட்புற சுத்தப்படுத்தும் முறைகளை மேற்கொள்வது போன்றவை சில சந்தர்ப்பங்களில் இயற்கையான நுண்ணுயிர் சமநிலையை பாதிக்கக்கூடும் என டாக்டர் பிரையன்ட் யாப் குறிப்பிட்டார்.
மலேசியப் பெண்களிடையேயும் அந்தரங்க சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகள் பொதுவாகக் காணப்படுவதாக அவர் கூறினார். மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், ஆய்வு செய்யப்பட்ட பெண்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் vaginitis எனப்படும் பிறப்புறுப்பு அழற்சி தொடர்பான பிரச்சினையை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“முதன்மை சுகாதாரப் பராமரிப்பில், bacterial vaginosis, மீண்டும் மீண்டும் ஏற்படும் சிறுநீரகப் பாதைத் தொற்றுகள் உள்ளிட்ட பல்வேறு அந்தரங்க சுகாதாரப் பிரச்சினைகளுடன் பெண்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். அந்தரங்க நுண்ணுயிர் சூழல் குறித்த நமது புரிதல் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், நன்மை தரும் Lactobacillus பாக்டீரியாக்களை பாதுகாப்பதும் உடலின் இயற்கையான பாதுகாப்பு சூழலை ஆதரிப்பதும் முக்கியமானதாகிறது,” என டாக்டர் பிரையன்ட் யாப் தெரிவித்தார்.
அந்தரங்க சுகாதாரம் என்பது அதிகப்படியான சுத்தப்படுத்தலின் மூலம் முழுமையான கிருமியற்ற நிலையை அடைவது அல்ல என்றும், உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை மதித்து செயல்படுவதே முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தேவையற்ற அளவில் கடுமையான சுத்தப்படுத்தும் பொருட்களைத் தவிர்ப்பது, மருத்துவ ஆலோசனையின்றி உட்புற சுத்தப்படுத்தும் முறைகளை மேற்கொள்ளாமல் இருப்பது, மென்மையான பராமரிப்பு தயாரிப்புகளைத் தேர்வு செய்வது மற்றும் தொடர்ந்து அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவரை அணுகுவது போன்றவை அந்தரங்க ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை கட்டுப்படுத்தும் அதேவேளையில், உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்களை பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறை, அனைத்து பாக்டீரியாக்களையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்ட பழைய சுகாதார முறைகளிலிருந்து விலகி, உடலின் இயற்கையான நுண்ணுயிர் சமநிலையை கருத்தில் கொண்ட பராமரிப்பு முறைகளை நோக்கி நகர்வதை பிரதிபலிக்கிறது.






