என் தமிழ்

நெகிரி செம்பிலான் வளர்ச்சியைத் தொடர மக்கள் பக்காத்தான் ஹராப்பானை ஆதரிக்க வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

நெகிரி செம்பிலான், 30 ஜூலை 2026 : செரம்பான் ஜெயாவில் நடைபெற்ற ஹராப்பான் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, கடந்த ஒரு தவணைக் காலத்தில் நெகிரி செம்பிலான் மாநில அரசு அடைந்த வளர்ச்சி சாதனைகளை மக்களுக்கு நினைவூட்டினார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதுடன், போக்குவரத்து மற்றும் இணைப்புத் திட்டங்களிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், புத்ராஜெயாவுக்கு அருகில் அமைந்துள்ள நெகிரி செம்பிலான், நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் மாநிலமாக திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கு, மக்களின் நலனில் அக்கறை கொண்ட வலுவான தலைமையை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம் என்று கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தினார்.

பக்காத்தான் ஹராப்பான் மக்களின் நலன், மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் ஆட்சியைத் தொடர்ந்து வழங்க உறுதிபூண்டுள்ளதாகவும், நெகிரி செம்பிலானை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் இலக்குடன் செயல்படுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Scroll to Top