ஜொகூர், 21 ஜூலை 2026 : ஜொகூர் மாநிலம் பத்து ஆனாம் தமிழ்ப்பள்ளியில் (SJKT Batu Anam) நடைபெற்ற ‘பாலன்ராஜ் மியூசிக்கல் நைட்’ நிகழ்ச்சியில் அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
பத்து ஆனாமைச் சேர்ந்தவரும், அப்பள்ளியின் முன்னாள் மாணவருமான பாலன்ராஜ், மலேசிய இசைத்துறையில் இசையமைப்பாளராகவும் இசை இயக்குநராகவும் உயர்ந்துள்ளதைக் குறிப்பிட்டு, அவரது சாதனை உள்ளூர் இளைஞர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறது என்று அமைச்சர் பாராட்டினார்.
நிகழ்வின் போது, பாலன்ராஜ் இசையமைத்த பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ள யு.எஸ்.பி. (USB) நினைவகத்தை அமைச்சர் யுனேஸ்வரன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வைத்தார்.
அத்துடன், பத்து ஆனாம் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்களில் விமானி, நிறுவன இயக்குநர், கராத்தே பயிற்சியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர். அவர்களின் வெற்றி, குறிப்பாக இந்திய சமூக இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதுடன், ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் இலக்கை நோக்கி பயணிக்கத் தூண்டும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த இசை நிகழ்ச்சியில் உள்ளூர் கலைஞர்களின் இசை மற்றும் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததுடன், சமூகத்தில் உள்ள கலைத்திறமைகளையும் வெளிக்கொணர்ந்தன.
இந்நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த பத்து ஆனாம் தமிழ்ப்பள்ளி நிர்வாகம், பாலன்ராஜ் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினருக்கு அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் மேலும் பல உள்ளூர் திறமையாளர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி உயர்ந்த நிலையை அடைய வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








