கோலாலம்பூர், 15 ஜூலை 2026 : தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சாதனாஷா நாகராஜன் (5M), ‘போர்னியோ சர்வதேச கண்டுபிடிப்பு மற்றும் புத்தாக்கப் போட்டி 2026’-இல் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
அவர் உருவாக்கிய ‘ஆட்டோமேட்டிக் பெட் ஃபீடர்‘ (Automatic Pet Feeder) என்ற புத்தாக்கம், போட்டியின் நடுவர்களின் பாராட்டைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றது. மாணவியின் படைப்பாற்றல், புதுமையான சிந்தனை மற்றும் அறிவியல் திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சிறப்பான சாதனைக்காக சாதனாஷா நாகராஜனுக்கும், அவரது பெற்றோருக்கும், பயிற்றுநருக்கும் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி நிர்வாகம் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.
மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும் புத்தாக்கத் திறனையும் ஊக்குவிக்கும் இத்தகைய சாதனைகள், பள்ளிக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்ப்பதோடு, எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெற மாணவர்களுக்கு உந்துதலாக அமையும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.







