என் தமிழ்

ஜோகூர் தேர்தல் : 56 மையங்களில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது

ஜோகூர், 27 ஜூன் 2026 : ஜோகூர் மாநிலத்தின் 16-ஆவது மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 56 வேட்புமனுத் தாக்கல் மையங்களில் சுமுகமாகவும் அமைதியான சூழலிலும் நடைபெற்றது. நல்ல வானிலை நிலவியதால், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் பணிகள் எவ்வித இடையூறும் இன்றி முன்னெடுக்கப்பட்டன.

காலை 9 மணி முதல் 10 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், தேர்தல் ஆணைய (SPR) அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு, நடைமுறைகள் ஒழுங்காக நடைபெறுவதை உறுதி செய்தனர். சட்டம்-ஒழுங்கை பேணும் வகையில் ஒவ்வொரு மையத்திலும் பாதுகாப்புப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதிகாலை முதலே பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் வேட்புமனுத் தாக்கல் மையங்களில் திரண்டு, தங்களது வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இருப்பினும், அனைத்து மையங்களிலும் நிலைமை கட்டுக்குள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தகவலின்படி, காலை நேரத்தில் ஜோகூரின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யவில்லை. எனினும், பிற்பகுதியில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ளதுடன், பொதுவாக்குப்பதிவு ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Scroll to Top