என் தமிழ்

வெளிநாட்டு MARA மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கல் நிறைவு

கோலாலம்பூர்,15 ஏப்ரல் 2026 : முன்னதாக ஏற்பட்ட ஒரு சிறிய தாமதத்திற்குப் பிறகு, மாரா நிதியுதவியுடன் வெளிநாடுகளில் (இந்தியாவில்) பயிலும் மாணவர்களுக்கான அனைத்து உதவித்தொகைகளும் திங்களன்று முழுமையாகச் செலுத்தப்பட்டன. சமூக ஊடகங்களில் வைரலான, மாணவர் உதவித்தொகை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்த பிரச்சினைக்குப் பதிலளித்த மாரா அமைப்பின் தலைவர் டத்தோ டாக்டர் அஸ்ராஃப் வாஜ்தி துசுகி, சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் உதவித்தொகை முழுமையாக வரவு வைக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.

ஆவணங்கள் மற்றும் நிர்வாகம் தொடர்பான பல்வேறு சிக்கல்களால் இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் மாணவர்களின், குறிப்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள மாணவர்களின் நலனைப் பாதிக்கக் கூடாது.

இது தொடர்பாக, அதிகாரத்துவ அல்லது ஆவணக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படாமல், உதவித்தொகை சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம் மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாரா இளையோர் அறிவியல் கல்லூரிக்கான (MRSM) 2025 மலேசியக் கல்விச் சான்றிதழ் (SPM) சிறப்புப் பாராட்டு விழாவில் கலந்துகொண்ட பிறகு, செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒரு நாள் தாமதம் கூட மாணவர்களைப் பாதிக்கும் என்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

வெளிநாட்டில் கல்வி பயின்ற அவர், உதவித்தொகை தாமதமாகும் போது மாணவர்கள் சந்திக்கும் சிரமங்களையும் புரிந்துகொண்டு, இவ்விவகாரத்திற்குத் தீவிர கவனம் செலுத்தப்படும் என்றும், எதிர்காலத்தில் இது மீண்டும் நிகழாது என்றும் உறுதியளித்தார்.

Scroll to Top