பியாங்யாங், 12 மார்ச் 2026 : அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து நடத்தி வரும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு பதிலடியாக, வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது. வடகொரியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள தீவுகளை இலக்காகக் கொண்டு, ‘சோ ஹியோன்’ என்ற அதிநவீன போர்க்கப்பலில் இருந்து நேற்று குரூஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டன.
இந்த ஏவுகணைகள் கடலில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையை வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், தனது 13 வயது மகள் கிம் ஜூ ஏ உடன் நேரில் இருந்து பார்வையிட்டார். கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து, ஏவுகணைகள் பாய்வதையும் அவை இலக்குகளை தாக்குவதையும் திரை மூலம் தனது மகளுக்கு விளக்கினார்.
அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலைக்கு நடுவில், கிம் ஜாங் அன் மேற்கொண்ட இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.




