என் தமிழ்

நம்பிக்கையுடன் எஸ்பிஎம் தேர்வுகளை எழுதுங்கள். கல்வியில் உங்களுக்கு வழிகாட்ட மஇகா-எம்ஐஇடி காத்திருக்கின்றோம் – தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், 25 நவம்பர் 2025 :  மஇகா தேசியத் தலைவரும் எம்ஐஇடி அறவாரியத் தலைவருமான தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களின் ஊடக அறிக்கையில் நம்பிக்கையுடன் எஸ்பிஎம் தேர்வுகளை எழுதுங்கள்! கல்வியில் உங்களுக்கு வழிகாட்ட மஇகா-எம்ஐஇடி காத்திருக்கின்றோம் என எஸ்பிஎம் தேர்வு எழுதும் இந்திய மாணவர்களுக்கு தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வாழ்த்து தெரிவித்தார்.

அவர் தனது அறிக்கையில்

இன்று செவ்வாய்க்கிழமை நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கும் எஸ்பிஎம் தேர்வுகளுக்கு அமரும் அனைத்து மலேசிய மாணவர்களுக்கும் குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர்களின் கல்விப் பயணத்தில் எஸ்பிஎம் என்பது ஒரு முக்கியமான காலகட்டம். இதில் நீங்கள் பெறும் தேர்ச்சிதான் கல்வி ரீதியாக உங்களின் அடுத்த கட்டக் கல்விப் பயணத்தைத் தீர்மானிக்கிறது என்பதை உணர்ந்து மிகுந்த நம்பிக்கையுடன் நன்கு படித்து, தேர்வுகளை எழுதுங்கள். வெற்றி வாகை சூடுங்கள் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய மாணவர்கள் கல்வியில் சிறந்த தேர்ச்சி பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதன் மூலம் தங்களின் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், படித்த பள்ளிக்கும் மட்டும் பெருமை சேர்க்காமல் நமது இந்திய சமுதாயத்திற்கும் பெருமையும் கௌரவமும் சேர்க்கிறீர்கள் என்பதையும் உணர்ந்து இந்தத் தேர்வுகளை அணுகுங்கள்.

தமிழ் மொழி இந்த நாட்டில் பள்ளிகளிலும், உயர்நிலைக் கல்விக் கழகங்களில் என்றும் நிலையாக நிலைத்திருப்பதற்கு ஒரு காரணம் தமிழ்ப் பள்ளிகள் என்றால், மற்றொரு காரணம் தமிழ் மொழி கல்வி ரீதியாகத் தொடர்ச்சி பெறுவதற்கு இடைநிலைப் பள்ளிகளில் குறிப்பாக எஸ்பிஎம் தேர்வுகளில் தமிழ் மொழியையும், தமிழ் இலக்கியத்தையும் ஒரு பாடமாக எடுக்கும் இந்திய மாணவர்களாகும். எனவே எஸ்பிஎம் தேர்வுகளில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியப் பாடங்களை எடுக்கும் இந்திய மாணவர்களும் அந்தப் பாடங்களில் சிறந்த தேர்ச்சி பெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எஸ்பிஎம் தேர்வுகளுக்கு அமரும் இந்திய மாணவர்கள் யாரும் தேர்வு முடிவுகள் குறித்தோ, அடுத்து தங்களின் உயர்கல்வியை எவ்வாறு தொடர்வது என்ற அச்சமோ, கவலையோ இன்றி தேர்வுகளை எழுதுங்கள். இத்தனை ஆண்டுகாலமாக இந்திய சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்குத் திறம்படப் பணியாற்றி வரும் மஇகா இனியும் எதிர்காலத்திலும் உங்களுக்கானப் பாதுகாவலனாக, கல்வி அரணாகத் தொடர்ந்து செயல்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மஇகா மூலம் தோற்றுவிக்கப்பட்ட எம்ஐஇடி கல்வி அறவாரியம் வசதி குறைந்த இந்திய மாணவர்களுக்கு கரங்கொடுத்து உதவக் காத்திருக்கிறது. அதே வேளையில் இந்திய மாணவர்கள் தங்களின் தகுதிக்கேற்ப விருப்பமானத் துறைகளைத் தேர்ந்தெடுத்துப் பயில, நமது ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம் தன் கதவுகளைத் திறந்து வைத்துக் காத்திருக்கிறது.

எஸ்பிஎம் தேர்வுகளை அடுத்து டிவெட் என்னும் தொழிற்பயிற்சி கல்வியைத் தொடர விரும்புபவர்களுக்கு பிரம்மாண்டமான அளவில் சிரம்பான், டேஃப் கல்லூரி வளாகம் புதுப்பிக்கப்பட்டு தயாராகிக் கொண்டிருக்கிறது.

எனவே, இந்திய மாணவர்கள் அனைவரையும் கல்வித் துறையில் எல்லா வகையிலும் வழிகாட்ட மஇகாவும் எம்ஐஇடியும் எப்போதும் தயாராக இருக்கின்றோம். அந்த எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் இதயங்களில் ஏற்றுக் கொண்டு, நம்பிக்கையுடன் எஸ்பிஎம் தேர்வுகளை எழுதுங்கள்.

உங்களின் வெற்றிக்கு இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.

அன்புடன்,
தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
மஇகா தேசியத் தலைவர், எம்ஐஇடி கல்வி அறவாரியத் தலைவர்

Scroll to Top