கோலாலம்பூர், 11/03/2025 : மத போதகர் முஹமட் ஜம்ரி வினோத் காளிமுத்துவுடன் மதம் குறித்த விவாதத்தைத் தொடர போவதில்லை என மஇகா துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் எடுத்துள்ள முடிவானது, நாட்டில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பேணுவதில் மிகவும் பொருத்தமான நடவடிக்கையாகும்.
அவரின் முடிவை வரவேற்றிருக்கும் ஜம்ரி வினோத்தின் நடவடிக்கையும் பாராட்டுக்கு உரியது என, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு மதம், கலாச்சாரம் மற்றும் இனப் பின்னணிகளைச் சேர்ந்த மலேசியர்களின் ஒற்றுமையைப் பேணுவதன் முக்கியத்துவத்தை டத்தோ ஶ்ரீ எம். சரவணனின் முடிவு புலப்படுத்துவதாக டத்தோ ஏரன் அகோ டாகாங் கூறியுள்ளார்.
பன்முகத்தன்மை கொண்ட மலேசியாவின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதில், இது ஒரு நேர்மறையான முடிவாகி இருப்பதாகவும், இது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் எனவும் ஏரன் தெரிவித்தார்.
இம்மாதம் 23-ஆம் தேதி, ஜம்ரி வினோத்துடன் விவாதம் நடத்த போவதாக, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரான சரவணன் கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.
நாட்டின் ஒற்றுமையைப் பேணுவதற்காக, மஇகா தலைவர் டான் ஶ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருடன் கலந்துரையாடிய பின்னர், மதம் சார்ந்த விவாதத்தைத் தாம் தொடர போவதில்லை என்ற முடிவை தாம் எடுத்திருப்பதாக சரவணன் இன்று தெரிவித்துள்ளார்.
Source : Bernama
#DatukSeriMSaravanan
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews





