என் தமிழ்

பெருநாள் காலங்களில் கனரக வாகனங்கள் சாலையில் பயணிக்க தடை

செமினி, 11/03/2025 : இம்மாத இறுதியில் கொண்டாடவிருக்கும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, நான்கு நாள்களுக்குக் கனரக வாகனங்கள் சாலையில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 29, 30 மற்றும் ஏப்ரல் 5,6 ஆகிய தேதிகளில், பெருநாளுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னும் பின்னுமாக அத்தடை அமல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

“போக்குவரத்து நெரிசலில் ஏற்படும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக, சொந்த ஊர்களுக்குச் செல்லும் சொந்த வாகனங்கள். இந்த சாலை தடையின் முக்கிய நோக்கம் என்னவென்றால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதும் கனரக வாகனங்களும் சொந்த வாகனங்களும் கலப்பதால் ஏற்படும் சாலை விபத்துகளின் அபாயத்தைக் குறைப்பதும் ஆகும்”, என்று அவர் கூறினார்.

சிலாங்கூர், செமினி அமலாக்க நிலையத்தில் ஜேபிஜே-வின் சிறப்பு செயல்பாட்டு திட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அந்தோணி லோக் அதனைக் கூறினார்.

பண்டிகைக் காலத்தில் சாலையில் ஏற்படும் விபத்துகளின் விகிதத்தைக் குறைக்கும் அமைச்சு மற்றும் ஜேபிஜே-யின் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக இது மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அதோடு, நோன்பு பெருநாளுக்காக நாடு முழுவதும், இம்மாதம் 24 தொடங்கி அடுத்த மாதம் ஏப்ரல் 8-ஆம் தேதிவரை சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் லோக் குறிப்பிட்டார்.

Source : Bernama

#AnthonyLoke
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

 

Scroll to Top