என் தமிழ்

2025/2026 பள்ளி தவணை; கிளந்தானில் தயார்நிலை பணிகள் சுமூகமாக நடைபெற்றன

கோத்தா பாரு, 16/02/2025 : இன்று தொடங்கிய 2025/2026 பள்ளி தவணையில், கிளந்தான் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 22 பள்ளிகளில், தேவைக்கு ஏற்ப அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, தயார்நிலை பணிகள் சுமூகமாக நடைபெற்றன.

பள்ளி உபகரணங்கள் உட்பட உதவிகள் பல்வேறு தரப்புகள் குறிப்பாக அரசாங்க சார்பற்ற அமைப்பு, நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனத்திடமிருந்து தொடர்ந்து கிடைத்து வருவதாக கிளந்தான் மாநில கல்விதுறையின் மாவட்ட கல்வி அலுவலக நிர்வகிப்பு மற்றும் திட்டமிடல் பிரிவு, கல்வி துணை தலைமை இயக்குநர் மாட் லாசிம் முஹமட் தெரிவித்தார்.

பள்ளிக்கு மட்டுமின்றி பள்ளி தவணையைத் தொடங்கும் மாணவர்கள் அனைத்து வசதிகளையும் கொண்டிருப்பதை உறுதிசெய்ய அவர்களுக்கு நன்கொடைகளும் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

”வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் செயல்படுவதற்கான போதுமான தயார்நிலை பணிகளை நாங்கள் மேற்கொண்டு விட்டோம். மாணவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய அனைத்து உபகரணங்களும் தயார்நிலையில் உள்ளதாக எங்களுக்கு அறிக்கை கிடைத்துள்ளது,” என்று மாட் லாசிம் குறிப்பிட்டார்.

இன்று, 2025/2026 பள்ளி தவணையின், முதல் நாளை முன்னிட்டு, கோத்தா பாரு சுல்தான் இஸ்மாயில் 1 தேசியப்பள்ளிக்கு வருகை மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இதனிடையே, அடுத்த மாதம் நிகழும் பருவமழை மாற்றத்தின் போது, மாணவர்கள் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதை கிளந்தானில் உள்ள அனைத்து பள்ளிகளும் உறுதிசெய்யுமாறு மாநில கல்வி துறைக்கு மாட் லாசிம் பரிந்துரைத்தார்.

பள்ளி தவணை முழுவதிலும், எந்தவொரு சுகாதாரப் பிரச்சனையையும் தவிர்க்கவும், மாணவர்கள் சுவாசக் கவசம் அணிவதை ஊக்குவிக்கவும் இப்பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

”கட்டாயமில்லை. (சூழ்நிலைக்கு) ஏற்றவாறு மேற்கொள்ளலாம். வெப்பம் அதிகமாக இருந்தால், மாணவர்கள் சுவாசக் கவசம் அணிய ஊக்குவிக்கலாம். வறண்ட வானிலையின்போது மாணவர்கள் எளிதில் தூசியை நுகர்வதால் காய்ச்சல், சளி, இருமல் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்த இடத்திற்கு, வகுப்பறைக்கு வெளியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நாங்கள் குறைப்போம். வானிலைக்குத் தகுந்த வசதியான இடத்தில் இருப்பதில் கவனம் செலுத்துவோம்,” என்றார் அவர்.

இம்மாதம் தொடங்கி மே வரை, பெரும்பாலான இடங்களில் குறிப்பாக பேராக், பகாங், கிளந்தான் உட்பட தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் வெப்பம் மற்றும் வறண்ட வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் டாக்டர் முஹமட் ஹிஷாம் முஹமட் அனிப் முன்னதாக தெரிவித்திருந்தார்.

Source : Bernama

#Kilantan
#Schools
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Scroll to Top