இந்தியர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த மடானி அரசாங்கத்தின் வியூக உறுதிப்பாடு
கோலாலம்பூர், 17/01/2025 : இந்திய தொழில்முனைவோரை மேம்பட செய்வதில் மடானி அரசாங்கம் எப்போதும் உறுதிபூண்டுள்ளது.
2007ஆம் ஆண்டு தொடங்கி தெக்கும் – ஸ்பூமி இந்திய தொழில்முனைவோருக்கான கடனுதவித் திட்டத்தின் கீழ் 10 கோடி ரிங்கிட் வழங்கப்பட்டிருப்பது வரலாற்றில் மிகப்பெரிய ஒதுக்கீடாக கருதப்படுகிறது.
இது இந்திய தொழில்முனைவோரின் வணிகங்கள் மேம்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான மற்றொரு வியூக முயற்சி என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்திய தொழில்முனைவோரைத் தொடர்ந்து மேம்படுத்தும் பொருட்டு 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் தெக்குன் நேஷனல் கடனுதவித் திட்டத்தின் மூலம் மூன்று கோடி ரிங்கிட் நிதியைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒதுக்கியிருந்ததை டத்தோ ஶ்ரீ ரமணன் இன்று தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, அந்தக் கடனுதவித் திட்டதிற்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் ஏழு கோடி ரிங்கிட்டின் வழி நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட இந்திய தொழில்முனைவோருக்கு உதவ முடியும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிதி வழங்கும் செயல்முறையை கண்காணித்து வரும் அதேவேளையில், அந்நிதி திறம்பட விநியோகிக்கப்படுவதையும் தாம் உறுதி செய்து வருவதாக ரமணன் கூறினார்.
பிரதமர் மற்றும் அமைச்சர் டத்தோ எவோன் பெனடிக்கின் வலுவான ஆதரவுடன் இந்திய சமூகத்திற்குப் பயனளிக்கும் வகையில் புதிய முயற்சிகளை மடானி அரசாங்கம் அவ்வப்போது அறிமுகப்படுத்தும் என்றும் ரமணன் உறுதியளித்தார்.
Source : Bernama
#DatukSeriRamanan
#MalaysiaMadani
#MalasyianIndians
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia