மலேசியா

ஆர்டிகே 3.0 திட்டத்தை விரைவில் அரசாங்கம் அமல்படுத்தும் என்ற தகவலை குடிநுழைவுத் துறை மறுத்துள்ளது

கோலாலம்பூர், 11 ஜனவரி (பெர்னாமா) — ஆர்டிகே 3.0 எனப்படும் மூன்றாவது தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டத்தை, கூடிய விரைவில் அரசாங்கம் அமல்படுத்தும் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலை மலேசிய குடிநுழைவுத் துறை மறுத்துள்ளது.

அதனை அமல்படுத்துவது தொடர்பில், இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ சகாரியா ஷாபான் தெரிவித்தார்.

ஆர்டிகே திட்டத்தின் பெயரைப் பயன்படுத்தி, வாய்ப்பைப் பெறும் தரப்பினரை, பொதுமக்கள் எளிதில் நம்பவேண்டாம் என்றும் அவர், இன்று வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தினார்.

மேலும், அது தொடர்பில் சரியான மற்றும் அண்மைய தகவல்களைப் பெறுவதற்கு, பொதுமக்கள் குடிநுழைவுத் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடங்களை நாடலாம் என்றும் சகாரியா கூறினார்.

2023-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஆர்டிகே 2.0 திட்டம் 2024 ஜூன் 30-ஆம் தேதி முழுமையாக நிறைவடையும் என்று அவர் கூறினார்.

தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டம் என்பது, மலேசியாவில் உள்ள அந்நிய நாட்டினரை சட்டப்பூர்வ வெளிநாட்டு தொழிலாளர்களாக மாற்றுவதற்கான ஒரு சிறப்புத் திட்டமாகும்.

இது, அரசாங்கத்தின் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு தகுதிவாய்ந்த முதலாளிகளால் பணியமர்த்தப்படும் செயல்முறையாகும்.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia