கிள்ளான், 27/09/2024 : நாட்டில் உள்ள துறைமுகங்களில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக, துறைமுகங்களில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் உள்கட்டமைப்புகள் ஆகியவை சீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதில் துறைமுகங்கள் முக்கியப் பங்கு வகிப்பதால் இது அவசியம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
முதலீடு மற்றும் வர்த்தகங்களை அதிகரிப்பதன் மூலமாக, மலேசியாவை பல்வேறு துறைகளுக்கான தொழில் போக்குவரத்து மையமாக மாற்றும் முயற்சிக்கு ஏற்ப இது அமைந்திருப்பதாக பிரதமர் கூறுகிறார்.
இன்று சிலாங்கூர், கிள்ளான் துறைமுகத்தில் நடைபெற்ற வெஸ்ட்போர்ட் 2 அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றும் போது அன்வார் அவ்வாறு கூறினார்.
இதனிடையே, கிள்ளான் துறைமுகத்தில் ஏற்படும் நெரிசலைக் கணிசமாகக் குறைப்பதற்கு, வெஸ்ட்போர்ட் 2 துறைமுகத்தை திறக்கும் திட்டம் சரியான ஒன்று என்று பிரதமர் கூறுகிறார்.
”1994-ஆம் ஆண்டு, நான் நிதி அமைச்சராக இருந்த காலகட்டம் வெஸ்ட்போர்ட்டில் முதலீட்டு முயற்சிகளை உருவாக்கி ஆதரிக்க வேண்டிய நேரமாக இருந்தது. 1994-ஆம் ஆண்டில் தொடக்கக்கட்ட பணிகளைக் கண்காணிக்க நான் செல்வேன். அதன் தொடக்கமும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக இருந்தது. எனினும், அதன் திறனும் செயல்பாடும் அதிகம்,” என்றார் அவர்.
பினாங்கு துறைமுகம் மற்றும் ஜோகூரில் உள்ள தஞ்சோங் பெலெபாசான் துறைமுகத்திலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்த புதிய துறைமுகத்தை திறக்க வேண்டிய அவசியத்தை மறுக்க முடியாது என்று தெரிவித்த அன்வார், இந்த துறைமுக விரிவாக்கத் திட்டத்தை வெற்றியடைய அரசாங்கம் முழு ஆதரவை வழங்கும் என்றும் கூறினார்.
Source : Bernama
Comments are closed, but trackbacks and pingbacks are open.