மறக்கப்பட்ட கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக ‘வில்லிசை ராமாயணம்’

Villisai Ramayanam

கோலாலம்பூர், 26/09/2024 : மறக்கப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் பெரும் முயற்சியாக ‘வில்லிசை இராமாயணம்’ எனும் இதிகாச மேடை நாடகத்தை விரைவில் அரங்கேற்றம் செய்ய உள்ளது ஷாம்பவி வென்ச்சர்ஸ் நிறுவனம்.

இந்நிறுவனத்தின் பெரும் முயற்சிக்கு தோள்கொடுக்கும் வகையில் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா கலை கலாச்சார் அறக்கட்டளை இணைந்து ‘வில்லிசை இராமயணம்’ இசை மேடை நாடகத்தை அரங்கேற்றம் செய்கிறது.

‘வில்லிசை இராமாயணம்’ இசை மேடை நாடகத்தின் இசை அறிமுக விழா தலைநகரில் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அரங்கில் 25/09/2024 அன்று விமரிசையாக நடைபெற்றது.

இந்நாட்டில் ஒரு மேடை நாடகத்தின் இசை அறிமுகவிழா நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

இராமாயண இதிகாசத்தை, நாட்டுப்புற இசைக்கலையான வில்லிசையோடு இணைத்து மேடை நாடகமாக தயாரிக்கப்படுவதும் இதுவே முறையாகும்.

இந்நாடகத்தை இயக்கி தயாரித்து வழங்குகிறார் செவ்விசை சித்தர் ரெ.சண்முகத்தின் புதல்வி ரெ.ச.தர்மவதி. இந்நாடகத்தை எடுத்து வடிவமாக்கியுள்ளார் சோதிராஜன் பரஞ்சோதி. இந்நாடகத்திற்கான அனைத்து பாடல்களையும் உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் துருவன் மாரியப்பன்.

சுமார் 120 கலைஞர்களின் உழைப்பில், ஒரு லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி பொருள் செலவில் இந்நாடகம் உருவாகிறது என தர்மவதி சண்முகம் தெரிவித்தார்.

டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி, இலக்கிய அறவாரியம் மற்றும் கலை கலாச்சார அறவாரியத்தின் நிர்வாக செயலாளர் கரு.பன்னீர் செல்வம் பாடல் அறிமுக விழாவிற்கு தலைமையேற்றிருந்தார்.

மறக்கப்பட்டு வரும் கலைகளுக்கு புத்துயிர் கொடுத்து மீட்டெடுக்கும் முயற்சியை அறவாரியம் எடுத்து வருவதாக கரு.பன்னீர் செல்வம் குறிப்பிட்டார்.

நாட்டில் கலை, மொழி, கலாச்சாரம், இலக்கியம் வளர்வதற்காக பக்கபலமாக இருப்பதுடன் நிதி உதவிகளையும் அறவாரியம் வழங்கி வருவதையும் கரு.பன்னீர் செல்வம் குறிப்பிட்டார்.

கடந்த 32 ஆண்டுகளில் அறவாரியம் பல புதிய கவிஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் உருவாக்கத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியிள்ளதையும் நினைவு கூர்ந்தார்.

வில்லிசை இராமாயணம் மேடை நாடகத்திற்காக சுமார் 27 பாடல்களை உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் துருவன் மாரியப்பன். ஒவ்வொரு பாடல்களும் 30 வினாடிகள் முதல் 3 நிமிடங்கள் வரை காட்சிகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளதாக துருவன் மாரியப்பன் சொன்னார். இளம் புதிய பாடகர்கள் பலரும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாடல் அறிமுக விழாவின் முத்தாய்ப்பாக மூத்த பாடகரும் இசையமைப்பாளருமான இசைத்தென்றல் என்.மாரியப்பன் சிறப்பு செய்யப்பட்டார்.

இந்த இசை மேடை நாடகம் எதிர்வரும் அக்டோபர் 19,20 ஆகிய இரு நாட்களுக்கு பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெறவுள்ளது.

அழைப்புக்கார்டுகளுக்கு 011-24397177, 014-6316077, 010-2277802 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.

#VillisaiRamayanam
#MalaysiaNews
#Malaysia

Villisai Ramayanam

Comments are closed, but trackbacks and pingbacks are open.