தென்கொரியாவில்: மகாத்மா காந்தி சிலை திறப்பு

தென்கொரியாவில்: மகாத்மா காந்தி சிலை திறப்பு

Mahatma

தென்கொரியாவில் முதன்முறையாக மகாத்மா காந்தியின் சிலை திறக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் பூசான் நகரத்தில் இந்தச் சிலை திறக்கப்பட்டுள்ளது. அந்த நகரத்தின் புதிய‌ மேயர் பியோங் சூ சா இந்தச் சிலையை திறந்துவைத்தார்.

அப்போது தென்கொரியாவுக்கான இந்தியத் தூதர் விஷ்ணு பிரகாஷ் மற்றும் இந்திய கலாச்சார உறவுக் கழகத்தின் இயக்குநர் சதீஷ் மேத்தா ஆகியோர் உடனிருந்தனர். இந்தச் சிலை திறப்பின்போது பேசிய பியோங் சூ, “இந்தியாவுக்கும் கொரியாவுக்குமிடையே நீண்ட, நிலையான, ஆழமான உறவு இருந்து வருகிறது. மகாத்மா காந்தியின் அமைதி, சகோதரத்துவம் போன்ற பண்புகளை ஒவ்வொரு கொரிய குடிமகனும் பின்பற்றட்டும்” என்றார்.

இந்திய கலாச்சார உறவுக் கழகத்தின் அன்பளிப்பான இந்த வெண்கலச் சிலை கெளதம் பால் எனும் பிரபல சிற்பியால் வடிவமைக்கப்பட்டது. முன்னதாக இந்த ஆண்டு, இரு நாடுகளின் நட்புறவின் அடையாளமாக தென்கொரிய அதிபர் பார்க் கியூன் ஹைக்கு இந்திய அரசு போதி மரக் கன்றை வழங்கிச் சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.