நவம்பர் 20, கேரளாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகள் அமைத்து தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி நடந்தது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சமீபத்தில் சரிதா நாயரின் ஆபாச படம் செல்போன்களில் வாட்ஸ் அப் மூலம் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆபாச படத்தை வெளியிட்டு தன்னை மிரட்டுபவர்கள் சில அரசியல்வாதிகள் என்றும், இதன் பின்னணியில் ஒரு போலீஸ் அதிகாரி இருப்பதாகவும் சரிதா நாயர் குற்றம் சாட்டி இருந்தார். இதுபற்றி கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாட்ஸ் அப் மூலம் சரிதா நாயரின் ஆபாச படத்தை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் சவுதி அரேபியாவில் வசிக்கும் ஒருவரது செல்போனுக்கு சரிதா நாயரின் ஆபாச படம் வாட்ஸ் அப் மூலம் வந்தது. அவர் இதுபற்றி சவுதி அரேபிய போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது, சவுதி அரேபியாவில் வசிக்கும் 4 கேரள வாலிபர்கள்தான் இந்த ஆபாச படத்தை பரப்பியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
சவுதி அரேபிய சட்டப்படி ஆபாச படங்கள் பார்ப்பது, வைத்திருப்பது பெரிய குற்றமாகும். இதற்காக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.